கேசவ விநாயகத்தை ஒட்டுமொத்தமாக தூக்கி எறிந்த பாஜக.! பின்னனியில் யார்- காரணம் என்ன.?
மாநிலத் தலைவராக இருந்தாலும், வேட்பாளர் தேர்வு நிர்வாகிகள் நியமனம், உள்ளிட்ட அனைத்திற்கும் மாநில அமைப்பு செயலாளராக உள்ள கேசவ விநாயகத்திடம் ஒப்புதல் வாங்கவேண்டியது அவசியம். அப்படி அதிக அதிகாரம் கொண்ட பதவியில் இருந்து கேசவ விநாயகம் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜக, அடுத்தாக தென் மாநிலங்கள் மீது பார்வையை திருப்பியுள்ளது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளாகவே பல நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதிலும் தமிழகத்தில் எப்படியாவது திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தோடு காய் நகர்த்தி வருகிறது. இதன் படி பாஜக மாநில தலைவர்களாக தமிழிசை, எல்.முருகன், அண்ணாமலை என நிர்வாகிகளை நியமித்தது. இதற்கு ஏற்ப அண்ணாமலையின் அதிரடி அரசியலில் தமிழகம் முழுவதும் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்தது.
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்தோடு களம் இறங்கிய பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கான பணியில் பாஜக ஈடுபட்டு வரும் நிலையில், பாஜகவின் மாநில அமைப்பு பொதுச்செயலாளாராக இருந்த கேசவவிநாயகம் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட கேசவவிநாயகம், 2016, 2021 சட்டசபை 2019, 2024 மக்களை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் என நான்கு தேர்தலில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நபராக கேசவ விநாயகம் இருந்து வந்தார். மாநிலத் தலைவராக இருந்தாலும், நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்திற்கும் மாநில அமைப்பு செயலாளராக உள்ள கேசவ விநாயகத்திடம் ஒப்புதல் வாங்கவேண்டியது அவசியம். எனவே அதிக பவர் கொண்ட பதவியில் இருந்தவரைத் தான் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வரும் நிலையில், அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக நிர்வாகிகளின் கூட்டு கூட்டம் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு உடனடியாக வருகை தருமாறு நயினார் நாகேந்திரன் , அண்ணாமலை , தமிழிசை உள்ளிட்ட 13 முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மேக்வால் , முரளிதர் மொஹல் , எல்.முருகன் , தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரும் வரவழைக்கப்பட்டனர் .
அப்போது பாஜகவின் உட்கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் கேசவ விநாயகம் தொடர்பாக புகார்களை தெரிவித்தாக கூறப்படுகிறது. அந்த வகையில், கேசவ விநாயகம் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், கட்சிப் பொறுப்புகள் நியமனம் செய்வதில் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
எனவே கேசவ விநாயகத்தை கட்சி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு இதனை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து தான் இரவோடு இரவாக கேசவவிநாயகம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு கேசவ விநாயகம் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.























