அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், ஆண்டின் தொடக்கத்தில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. அல்லது பா.ஜ.க. அங்கும் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்தது.


முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடக தேர்தல்:


அதற்கு அடுத்தபடியாக, கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான முடிவுகள், 13ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.


தேசிய அளவில் விவாத பொருளாக மாறியுள்ள கர்நாடக தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கர்நாடக மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.


கைகூப்பி கேட்டு கொண்ட மம்தா பானர்ஜி:


தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக உள்ள மம்தா வெளியிட்ட வீடியோ செய்தியில், "கர்நாடகாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு எனது ஒரே வேண்டுகோள். ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு வாக்களியுங்கள். தயவு செய்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் ஆபத்தானவர்கள்" என பேசியுள்ளார்.


இதற்கு முன்னரும், இதேபோன்ற கருத்தைதான் மம்தா தெரிவித்திருந்தார். சமீபத்தில், மால்டா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா, "எவ்வளவு சீக்கிரம் பாஜக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படுகிறதோ அது நாட்டுக்கு நல்லது.


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம். நீங்கள் விரும்பும் வேறு எந்த கட்சிக்கும் வாக்களியுங்கள். பாஜகவின் வீழ்ச்சி கர்நாடகாவில் இருந்து தொடங்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். இந்து மதத்தில் உள்ள ஆன்மீகத்தை பாஜக அழித்துவிட்டது" என கூறியிருந்தார்.


மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தேசிய அரசியலில் பரபர:


அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், மம்தாவை சமீபத்தில் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து, பிஜு ஜனதா தளத்தின் தலைவரும் ஒடிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கை மம்தா சந்தித்தார். பாஜகவை போன்றே காங்கிரஸை எதிர்க்க இந்த மூன்று முக்கிய தலைவர்களும் முடிவு எடுத்ததாக தகவல் வெளியானது.


ஆனால், அதன் பிறகு, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மம்தாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு, காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை மம்தா தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.