நயினார் நாகேந்திரன் பேசியது போல இனிமே யாரவது பேசினா தக்க பதிலடி குடுப்போம் என்றும், அடிக்கடி மன்னிச்சுக்கிட்டே இருக்க முடியாது எனவும் அதிமுகவைச் சேர்ந்த விந்தியா கூறினார்.


நகர்ப்புறத் உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், அதிமுக, பாஜக தனித்தனியே போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது, அரசியல் வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டாலும், தொகுதி பங்கீடு காரணமாகத்தான் தற்போது நகர்ப்புறத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவதாகவும், மற்றப்படி, கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை என்றும் அண்ணாமலையும்,எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்தனர்.


இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த விந்தியா தொகுதி பங்கீடு குறித்தும், நயினார் நாகேந்திரனின் பேச்சு குறித்தும் பேசியுள்ளார். அதில், தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை என்பதுதான், பாஜகவோடு கூட்டணி இல்லாததற்கு காரணம் என்றும், சிறுபான்மையினர் வாக்கு வங்கி குறித்து பயம் இருந்திருந்தா சட்டப்பேரவை தேர்தலையே தனியா சந்திருப்போமே எனவும் கூறினார்.


மேலும், நயினார் நாகேந்திரன் பேசியது போல இனிமே யாராவது பேசினா தக்க பதிலடி கொடுப்போம் என்றும், அடிக்கடி மன்னிச்சுகிட்டே இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.


முன்னதாக, அதிமுக-பாஜக இடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக கடந்த ஞாயிற்றுகிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறினார். எனினும் இரு கட்சிகள் இடையே இடங்கள் பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக கூறப்பட்டு வந்தது.


இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவுடன் நடைபெற்றது. ஆனால் அதிமுக பெரிய கட்சி என்பதால் எங்களுடைய கோரிக்கையை அவர்களால் முழுவதுமாக நிறைவு செய்ய முடியவில்லை. ஆகவே இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனியாக போட்டியிடுகிறோம். பாஜகவின் கட்சி வளர்ச்சிக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. தேசிய அளவில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும்.


தாமரை மலர வேண்டும். தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். அதிமுகவுடனான நல்லுறவு தொடரும். தனித்து போட்டியிடுவது கடினமான முடிவு இல்லை. இது கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10 சதவீத இடங்களை ஒதுக்குவதாக அதிமுக முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தெரிவித்தது. ஆனால் அதைவிட அதிக இடங்களில் போட்டியிட பாஜக விரும்புகிறது.” எனக் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண