நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், ஒரு சில இடங்களில் மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில், பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அனீஸ் பாத்திமா மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான, தங்கை அனீஸ் பாத்திமா அவர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடூரமானத் தாக்குதல் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. 

Continues below advertisement

கர்ப்பிணிப் பெண் வேட்பாளர் மீது தாக்குதல்

மாற்று அரசியல் கருத்துகளை எதிர்கொள்ளத் துணிவில்லாத திமுகவினர், ஒரு கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல், மனிதாபிமானமற்ற முறையில் வன்முறையை ஏவி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசியல் நாகரிகம் என்பது பெண்களை மதிப்பதிலும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலுமே அடங்கியுள்ளது. ஆனால், அதிகார மமதையில் திமுக கட்சியினர் பெண் வேட்பாளரை, அதுவும் ஒரு கருவுற்றத் தாயின் மீது தாக்குதல் நடத்தி மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது, நாகரிகச் சமூகத்தின் தலைகுனிவாகும்.கருவில் இருக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், ஒரு சாதாரண அரசியல் மோதல் அல்ல. இது மிக மோசமான மனித உரிமை மீறல்.

திமுகவினரை கைது செய்யுங்க

சனநாயக ரீதியாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை. திமுகவினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கவலையளிக்கிறது. இந்த அராஜகச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, தங்கை அனீஸ் பாத்திமா அவர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். 

Continues below advertisement