Uddhav Thackeray : ’இந்தியா கூட்டணிக்கு புதிய தலைமை மு.க.ஸ்டாலின்?’ முயற்சிக்கும் உத்தவ் தாக்கரே - அதிர்ச்சியில் காங்கிரஸ்..!
’மு.க.ஸ்டாலினை இந்தியா கூட்டணிக்கு தலைமையாக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவின் குரலாக சாம்னா பத்திரிகை ஒலித்திருப்பது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது’

காங்கிரஸ் தலைமையில் செயல்படும் இந்தியா கூட்டணிக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பு தெரிவித்துள்ளது. அவர்களது கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சியடை வைத்துள்ளது.
காங்கிரஸ் மீது அதிருப்தியில் உத்தவ்
மக்களவை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழும் வகையிலேயே இருப்பதாகவும், தேர்தல் அறிவித்துக்கொள்ளும்போது மட்டும் விழித்துக்கொள்வதும் மற்ற நேரங்களில் அசந்து தூங்குவதாகவும் காங்கிரஸ் இருக்கிறது என்றும் இதனால் இந்தியா கூட்டணி தலைமை குறித்த மாற்றத்திற்கான நேரம் வந்திருப்பதாகவும் சாம்னா பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலில் தோல்வியை தழுவினாலும் அடுத்த தேர்தலில் வெற்றியை பெற அந்த தோல்வியில் இருந்து உழைக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் மட்டுமே ஆக்டிவாகி வேலை பார்க்கிறது. இது வெற்றிக்கு உதவாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் காங்கிரஸ் போட்டியிட்டு வருகிறது. இது கூட்டணியின் அடிநாதத்தையே அசைத்து பார்க்கும் முடிவாக இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, அதிகாரத்தை நோக்கி திரும்பும் வேட்கையை ராகுல்காந்தி விட்டுவிட்டதாகவும், அதனால் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக்கு தொடர்ந்து தலைமையேற்றால் அது இந்த கூட்டணிக்கே பாதிப்பாக அமையும் என சாம்னா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும்
அதனால், இந்த கூட்டணியை பாஜகவிற்கு எதிரான வலுவான கூட்டணியாக மீண்டும் மாற்றி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்பி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் கூட்டணிக்கான தலைமையை மாற்ற வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக, திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினையோ அல்லது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியையோ தலைமையேற்க வைக்கலாம் என்றும் உத்தவ் தாக்கரேவின் குரலாக சாம்னா பத்திரிகை எழுதியுள்ளது
காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு
இந்த கட்டுரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திமுகவை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தி வரும் நிலையில், இப்படியான உத்தவ் தாக்கரேவின் குரல் திமுகவிற்கு சாதகமாக அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்























