TVK Vijay: மீனவர்களுக்காக குரல் கொடுத்த விஜய் - ”உருப்படியாக எதையும் செய்யாத திமுக” என சாடல்
TVK Vijay on TN Fishermen Arrest: தமிழ்நாடு மீனவர்களின் விடுதலைக்காக திமுக அரசு எதையும் உருப்படியாக செய்யவில்லை என, தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

TVK Vijay on TN Fishermen Arrest: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்களுக்காக குரல் கொடுத்த விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிக்கும் மீனவர்கள்
அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர்.
தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டு
மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் இன்று காலை காரைக்காலைச் சேர்ந்த 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது. விசாரணைக்குப் பின், யாழ்பானம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீனவர்கள் கைது நடவடிக்கையை தடுக்கவும், தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, முதலமைச்சர் ஸ்டாலின் பலமுறை வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும், இந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
























