TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து முதலமைச்சர் விஜய் உரிய நேரத்தில் அறிவிப்பார் என, ஆளுங்கட்சியாக தவெக தரப்பில் பாமக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான அறிவிப்பு, ஆளுநர் உரையிலேயே இடம்பெற்றால் மகிழ்ச்சி என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பாமக ஆலோசனை கூட்டம்:
சாதி வாரி சர்வே நடத்துவதன் தேவை குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் சமுதாய தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன், இந்தியாவிற்கான சமூக நீதியின் வேராக தமிழ்நாடு உள்ளது என அன்புமணி குறிப்பிட்டதில் இன்றைய நிகழ்வு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் இந்த கூட்டம் முக்கியத்துவமானது. தவெகவின் அடிப்படை கோட்பான மதச்சார்பற்ற சமூகநீதி செயல்படுத்தும் வண்ணம், முதல் நாளிலேயே பெரியாரின் பெரியார் வலியுறுத்திய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை செயல்வடிவம் பெற மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பும், ஒன்றிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அதற்கு மத்திய மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு
தவெகவும் தனது முதல் தேர்தல் வாக்குறுதியாக, விகிதாச்சார பிரதிநிதித்துவம் சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி சரியான நேரத்தில் தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் எடுக்க வேண்டும். கர்நாடகாவில் கடந்த ஆண்டுகளில் இரண்டு முறை சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. 69 சதவிகித இடஒதுக்கீடு நாளை நீதிமன்ற வழக்கிற்கு உட்படுத்தப்பட்டால், அதை பாதுகாக்க சாதி வாரி கணக்கெடு தரவுகள் அவசியம். இடஒதுக்கீடுகள் தொடர்பான வழக்குகளில் அண்மையில் சேகரிக்கப்பட்ட பெருவாரியான தரவுகளையே உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. அந்த தரவுகள் இல்லாததன் காரணமாகவே வன்னியர் உள் இட ஒதுக்கீடு மட்டுமின்றி மராத்தியம் மற்றும் ஜாட் சமூகத்தினர் தொடர்பான இடஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட்டன.
விரிவான கணக்கெடுப்பு அவசியம்
எனவே தந்தை பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அமைச்சரவையில், பிரதித்துவத்திற்கு இணையாக 8 பட்டியலின மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய சமூக நீதி புரட்சி. அதன் வழியில் விரைவில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு என வெளியிட்ட வரவேற்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் குறிப்பிட்ட பிரிவில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என பொதுவாக கணக்கெடுப்பு நடத்தக்கூடாது. அதன் மூலம் இடஒதுக்கீடு வழங்க முடியாது. எனவே விரிவான தரவுகளுடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முன்னெடுக்கப்பட வேண்டும்” என வீர விக்னேஷ்வரன் பேசினார்.
அன்புமணி கோரிக்கை
தொடர்ந்து அன்புமணி பேசுகையில், “மத்திய அரசு மிகப்பெரிய அளவில் மக்கள் தொகையை எண்ணும் பணிகளை தான் செய்கிறது. மாநில அரசு முன்னெடுப்பது என்பது மிகவும் தீவிரமான ஆய்வு தரவுகள். சமூகத்தின் பின் தங்கிய நிலை, சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற தரவுகள் அதில் இடம்பெறும். அதுதான் நமக்கு அவசியமானது. அதுதொடர்பான அறிவிப்பு வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையிலேயே இடம்பெற்றால் மிகவும் மகிழ்ச்சி. இதுதொடர்பாக முதலமைச்சரிடமும் நேரடியாக வலியுறுத்துவோம்” என தெரிவித்தார்.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்























