தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளது. மதுரை, பாரபத்தியில் நடிகர் விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

உயிர் இல்லாத மிருகம்:

பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என அனைவரையும் விமர்சித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என்று விமர்சித்து பேசினார். முன்னதாக, விஜய் தனது பேச்சைத் தொடங்கியவுடன் சிங்கம் தன்னைவிட பலமான, வலிமையான, உயிருள்ள மிருகத்தை மட்டுமே வேட்டையாடும். உயிர் இல்லாததை, கெட்டுப்போனதை தொட்டுக்கூட பார்க்காது என்று பேசினார். 

சீமானை சீண்டினாரா விஜய்?

விஜய்யின் இந்த பேச்சு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானையே மறைமுகமாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. ஏனென்றால், தவெக மாநாட்டிற்கு 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் பேசிய சீமான் தவெக-வையும், தவெக தொண்டர்களையும் மிக கடுமையாக விமர்சித்து பேசினார். 

Continues below advertisement

தளபதி என்பதை தலைவிதி என்றும், தவெக தொண்டர்களை அணில் குஞ்சு என்று கேலி செய்தார். மேலும், புலி மானையோ, சிங்கத்தையோ, காட்டெருமையோ வேட்டையாடுவதுதான் பெருமை என்றும் விஜய்யையும், தவெக-வையும் மிக கடுமையாக விமர்சித்து பேசினார். 

சீமானின் இந்த பேச்சு இணையத்தில் வைரலானது. மேலும், தவெக தொண்டர்கள் - நாம் தமிழர் இடையே போட்டி உண்டானது. இந்த நிலையில், சீமானுக்கு பதிலடி தரும் விதமாகவே விஜய் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. 

இணையத்தில் மல்லுகட்டு:

விஜய்யின் இந்த பேச்சை குறிப்பிட்டு சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும் தவெக தொண்டர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். விஜய் உயிர் இல்லாத மிருகம் என்று குறிப்பிட்டது சீமானையே என்று தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர். 

விஜய் கட்சி தொடங்கியதும் அவருக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது சீமானையே ஆகும். ஆனால், நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவராக பெரியாரை அறிவித்தது சீமானுக்கும், நாம் தமிழருக்கு பெரும் அதிருப்தியை உண்டாக்கியது. மேலும், தமிழ் தேசியமும், திராவிடமும் எனது இரு கண்கள் என்று விஜய் பேசியதற்கும் சீமான் கடுமையான விமர்சனத்தை தெரிவித்தார். 

தொடர்ந்து விஜய்யை சீமான் விமர்சித்து வரும் நிலையில், நேரடியாக சீமான் பெயரை குறிப்பிட்டு விஜய் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில், தவெக மாநாட்டில் அவர் மறைமுகமாக சீமானையே குறிப்பிட்டதாக அவரது தொண்டர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் இந்த மாநாட்டில் நடிகர் விஜய் அதிமுக - பாஜக கூட்டணியையும் அடிமைக் கூட்டணி, பொருந்தா கூட்டணி என்று விமர்சித்தார். திமுக-வை ஊழல் ஆட்சி என்றும். மு.க.ஸ்டாலினை கபட நாடக மு.க.ஸ்டாலின் அங்கிள் என்று கூறியது பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. கூட்டணி குறித்து பேசிய விஜய் சஸ்பென்சிலே சஞ்சாரம் செய்யுங்கள் என்று பேசினார். 

சுமார் 10 லட்சம் பேர் வரை இந்த மாநாட்டில் குவிந்ததாக கூறப்படுகிறது. மேலும், விரைவில் மக்களைச் சந்திக்க உள்ளதாகவும் விஜய் தெரிவித்தார். விஜய்யின் இந்த மதுரை மாநாடு தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியில் பெரும் உத்வேகத்தை உண்டாக்கியுள்ளது.