TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
தமிழக வெற்றிக் கழகம் இன்னும் தேர்தலையே சந்திக்கவில்லை. அதன் பிறகுதான் ஆட்சி அமைப்பதெல்லாம். ஆனால், அதற்குள்ளேயே, கட்சியில் பல்வேறு அட்ராசிட்டிக்கள் நடப்பது விஜய்க்கு தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்னும் ஒரு தேர்தலைக் கூட கட்சி சந்திக்கவில்லை. ஆனால், 2026-ல் ஆட்சியை பிடிக்கும் கனவில் உள்ள விஜய்க்கு, கட்சிக்குள் நடக்கும் அட்ராசிட்டிக்கள் தெரியுமா.? அப்படி தெரிந்திருந்தால், அதை அவர் சரி செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே எழுந்த புகாரால், மாவட்ட செயலாளர்களை தானே நியமித்த விஜய்
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதுமே, தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது. அரசியல் களத்திலும் தவெக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் மாநாட்டின் மூலம் தமிழக அரசியல் களத்தை அலற வைத்த விஜய், பரந்தூர் விசிட் மூலம் பெரும் பேசுபொருளாக மாறினார். தொடர்ந்து, பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றிவரும் விஜய், கட்சியை பலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் போன்றோரை கட்சியில் இணைத்தது, பிரஷாந்த் கிஷோருடன் கூட்டு சேர்ந்தது என அடுத்தடுத்து பிரேக்கிங் செய்திகளை கொடுத்துக்கொண்டே, கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் வேலைகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
கட்சியில் பதவி வழங்குவதற்கு, மாவட்ட நிர்வாகிகள் லஞ்சம் கேட்பதாக ஏற்கனவே புகார் எழுந்தது. இதனால், சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில், ஆனந்த்தையே ஓரம்கட்டிவிட்டு, தானே களத்தில் இறங்கி, நேர்காணல் நடத்தி, நிர்வாகிகளை நியமித்தார் விஜய். ஆனாலும், கட்சியில் இன்னும் மாவட்ட செயலாளர்களின் அட்ராசிட்டி ஓய்ந்ததுபோல் தெரியவில்லை.
மாவட்ட செயலாளர்கள் மீது மீண்டும் வரும் புகார்கள்
விஜய்யே பார்த்து மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ள போதிலும், புகார்கள் என்னவோ வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு சமீபத்திய விழுப்புரம் சம்பவமே சாட்சியாக உள்ளது. தவெக சார்பில் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த்திற்கு, மற்ற நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பதை தவிர்க்க, மாவட்ட செயலாளர் குஷி மோகன், அவரை காரில் இருந்து இறக்கி, மாற்று வழியில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற சம்பவத்தால், தவெக தொண்டர்கள் கொதித்துப் போய் உள்ளனர்.
மாற்றுக் கட்சியிலிருந்து தவெகவிற்கு வந்தவர்கள் வரவேற்பு அளிக்க காத்திருந்த நிலையில், அவர்கள் நின்ற வழியில் வந்தது ஆனந்த் இல்லாத அவரது கார் மட்டுமே. திமுகவிலிருந்து தவெகவிற்கு வந்ததால், எங்கே நாங்கள் பதவி வாங்கிவிடுவோமோ என்ற பயத்தில், குஷி மோகன் இத்தகைய சதித் திட்டத்தை அரங்கேற்றியதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஊழல்வாதிகளை வைத்துக்கொண்டு ஊழல் இல்லாத ஆட்சி வழங்க முடியுமா.?
மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களை மாவட்ட செயலாளர் மதிப்பதில்லை என்றும், தலித்துகள் அதிகம் இருக்கும் பகுதியில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் வழங்கவில்லை என்றும் மற்றொரு தொண்டர் கூறியுள்ளார். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு பொறுப்புக்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு குண்டை போட்டுள்ளார் அந்த தவெக தொண்டர். அதற்கான ஆதாரங்களையும் வைத்திருப்பதாக அவர் பகீர் கிளப்பியுள்ளார்.
விஜய்யை சந்தித்து தங்கள் புகார்களை தெரிவிக்கவும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறும் தொண்டர்கள், ஊழல்வாதிகளை வைத்துக்கொண்டு எப்படி ஊழல் இல்லாத ஆட்சியை விஜய் வழங்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். இது விஜய்க்கு தெரியுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளதாகவும், நிர்வாகிகள் அவரை ஏமாற்றுவதாகவும் தொண்டர்கள் கூறுகின்றனர்.
கட்சிக்குள் இருக்கும் பிரச்னையை சரி செய்வாரா விஜய்.?
விஜய் கட்சி ஆரம்பித்ததன் முக்கிய நோக்கமாக சொல்லப்படுவது, ஊழலை ஒழித்து நல்லாட்சி வழங்குவதுதான். ஆனால், தனது கட்சிக்குள்ளேயே பொறுப்புகள் வழங்க பணம் வாங்கும் மாவட்ட நிர்வாகிகளை வைத்துக்கொண்டு, அவர் எப்படி ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கப் போகிறார் என்பதே இப்போதைய முக்கிய கேள்வி. ஏற்கனவே எழுந்த புகார்கள் விஜய்யின் காதுகளுக்கு போனதால் தான், தானே நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தினார். ஆனால், அந்த நிர்வாகிகள் மீதே புகார் எழுந்துள்ளது. இந்த தகவல் விஜய்க்கு போனதா.? அதற்கு அவர் என்ன எதிர்வினையாற்றப் போகிறார் என்பதே தவெக தொண்டர்களின் இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு முன்னதாக, இதுபோன்ற பிரச்னைகளை விஜய் சரி செய்தால் மட்டுமே, தொண்டர்களுக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்படும். இல்லையென்றால், கட்சியின் நிலை மிகவும் மோசமாகிவிடும். தேர்தலிலும் டெபாசிட் கிடைப்பதே பெரும் பாடாகிவிடும்.
ஏற்கனவே, ஆனந்த்தின் கட்டுப்பாட்டில்தான் கட்சி உள்ளதென்று கூறப்பட்ட நிலையில், அவரை ஓரங்கட்டுவதுபோல் விஜய் சில அதிரடி முடிவுகளை எடுத்தார். தற்போது எழுந்துள்ள இந்த பிரச்னையை விஜய் எப்படி டீல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், நீண்ட கட்டமைப்பைக் கொண்ட கட்சிக்குள், ஒவ்வொரு நிலையிலும் உள்ள ஊழல்வாதிகளை விஜய் எப்படி கண்டறியப் போகிறார் என்பது ஒரு பெரிய கேள்வி. ஆனால், அதை உடனடியாக அவர் செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
வாட் ப்ரோ.? என்ன செய்யப்போறீங்க ப்ரோ.?





















