கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சிதம்பரம் விடுதி கட்டிடத்தில் வேலைதேடும் நபர்களுக்கும், வேலை தரும் தொழில் நிறுவனங்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தி தனியார் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் "பாலம்" திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். 




கரூர் மாவட்டத்தில் உள்ள டெக்ஸ்டைல் கொசுவலை பேருந்து கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ள 4000 பணியிடங்களை நிரப்பும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலை தேடும் நபர்களான 25 இளைஞர்களுக்கு, 5 நிறுவனங்களின் உதவியுடன் மேடையிலேயே வேலைவாய்ப்பை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். 




நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் செந்தில்பாலாஜி - கரூர் மாவட்டத்தில் உள்ள 4000 காலிப்பணியிடங்களை தனியார் நிறுவனங்கள் உதவியுடன் நிரப்பப்படவுள்ளன. கரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டை வழங்கும் வகையில் பயிற்சி வகுப்புகள் செயல்படுத்தப்பட உள்ளன. வேலை தேடும் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் இந்த "பாலம்" திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய நாளாக இந்நாளை கருதுகிறேன். இதேபோல் "அனைவருக்கும் இல்லம்" என்ற திட்டத்தையும் முதல்வர் உதவியுடன் விரைவில் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்த இருக்கிறோம். இந்த இரண்டு முக்கிய திட்டங்களும் சிறப்பாக செயல்பட உள்ளன என்று தெரிவித்தார்.




அதைத்தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைசார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி 1117 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி திட்ட மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற 9 மாத காலத்தில் 9828 முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்று 1103 பேர்களுக்கு உதவித் தொகைக்கான ஆணை வழங்கப்படுகிறது. இது மக்களுக்கான அரசு, மக்களுக்கான திட்டங்களை முதல்வர் செய்து வருகிறார்.



மகளிர் தினமான இன்று முதல்வர் சார்பில் மகளிர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் மாவட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டப்பணிகளை முதல்வர் வழங்கியுள்ளார். கரூர் மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.63 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம், 1480 கோடியில் இரண்டு தடுப்பணைகள் உள்ளிட்ட பணிகள் வழங்கிய முதல்வர், வேளாண்மைக் கல்லூரி வழங்கியுள்ளார். இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கையும் நடைபெறுகிறது. கரூர் மாவட்ட மக்கள் முதல்வருக்கு என்றும் அரணாக இருக்க வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து பெண் குழந்தைகள் அகல் விளக்கு திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மெஞ்சனூர் இளங்கோ மற்றும் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.