TN DGP: புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? மகேஷ் குமார் அகர்வால் எங்கே? சிஎம் விஜய் டிக் அடித்தது ஏன்?
TN DGP Mahesh Kumar Agarwal: தமிழ்நாட்டின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால், இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? என்பது தொடர்பான விவரங்களை இங்கே அறியலாம்.

TN DGP Mahesh Kumar Agarwal: தமிழ்நாட்டின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக மகேஷ் குமார் அகர்வாலை, முதலமைச்சர் விஜய் தேர்வு செய்தது ஏன்? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம்:
தமிழ்நாட்டின் சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக இருந்த சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியுடன் முடிவுற்றது. அதன் பிறகு சுமார் ஓராண்டாகியும் காவல்துறையின் முக்கிய பதவிக்கு நிலையான ஒருவர் தேர்வு செய்யப்படாமல், பொறுப்பு டிஜிபிக்களே அந்த பணிகளை மேற்கொண்டு வந்தனர். தேர்தல் நேரத்தில் சந்தீப் ராய் ராத்தோரை மாநிலத்தின் டிஜிபி ஆக தேர்தல் ஆணையம் நியமித்தது. அதைதொடர்ந்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு அனுப்பிய, 3 ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை யுபிஎஸ்சி தேர்வாணையம் அங்கீகரித்தது. அதன்படி, 1994ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால், மாநிலத்தின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக கடந்த 29ம் தேதி நியமிக்கப்பட்டார். ஆனால், இதுவரை அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவில்லை. சட்ட-ஒழுங்கு மிகப்பெரிய பிரச்னையாக வெடித்துள்ள நிலையில், புதிய டிஜிபி இன்னும் பொறுப்பேற்காதது ஏன்? என பல கேள்விகள் எழுந்துள்ளன.
புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்?
மகேஷ் குமார் அகர்வால் தற்போது டெல்லியில் எல்லை பாதுகாப்பு படையின் சிறப்பு டிஜிபி ஆக பணியாற்றி வருகிறார். மத்திய அரசு பணியில் உள்ள அவரை மீண்டும் மாநில அரசு பணிக்காக விடுவிக்க வேண்டும் என முறையாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவாம். அதன்படி, அந்த பணியில் இருந்து வெளியேறி, புதிய டிஜிபி ஆக பொறுப்பேற்கும் நாள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் அந்த பதவியை வகிப்பார். பொதுவாக மத்திய அரசு பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீண்டும் மாநில சேவைக்காக விடுவிப்பதற்கு 30 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.
மத்திய அரசால் நிராகரிக்க முடியுமா?
மத்திய அரசின் சேவையில் இருக்கும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியை விடுவிப்பதை மத்திய அரசால் தொழில்நுட்ப ரீதியாகத் தாமதப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ முடியும். காரணம் மத்திய அமைப்புகளில் பணியாற்றும் அதிகாரிகள் மீது அதுவே இறுதி நிர்வாக அதிகாரத்தை கொண்டுள்ளது. இருப்பினும், மத்திய அரசே UPSC மூலம் தகுதிவாய்ந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய பட்டியலை மாநில அரசுக்குத் தெளிவாக அங்கீகரித்துப் பரிந்துரைத்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அந்தப் பட்டியலிலிருந்து எந்தவொரு அதிகாரியையும் தேர்வுசெய்யவும் மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. எனவே மகேஷ் குமார் அகர்வாலை தடுத்து நிறுத்துவது, அரசியலமைப்பு ரீதியான முரண்பாட்டையும் உச்ச நீதிமன்றத்தில் நேரடி சட்டரீதியான சவால்களையும் ஏற்படுத்தும். பணிவிடுவிப்பு உத்தரவை நிராகரிக்கும் சட்டப்பூர்வ மறுப்புரிமை மத்திய அரசுக்கு இருந்தாலும், ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த காவல் படைக்குத் தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிக்கு எதிராக அந்த அதிகாரத்தை அரிதாகவே பயன்படுத்துகிறது. இந்நிலையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, வரும் ஜுன் 3ம் தேதி மகேஷ் குமார் அகர்வால் தமிழ்நாட்டின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.
இதனிடையே, சந்தீப் ராய் ராத்தோர் டிஜிபி ஆக தொடர்கிறாரா? என சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு, ஒருவேளை மகேஷ் குமார் அகர்வாலை விடுவிக்க மத்திய அரசு மறுக்குமோ? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிஎம் விஜய் ஒகே சொன்னது ஏன்?
22 வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போக்குவரத்து துணை ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர், ஆயுதப்படை டிஜிபி என பல பொறுப்புகளில் தமிழ்நாட்டில் பணியாற்றியுள்ளார். இதுபோக சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு பிரிவில் 10 ஆண்டுகள் பணியாற்றியதோடு, தற்போது எல்லை பாதுகாப்பு படை டிஜிபி ஆக செயல்பட்டு வருகிறார். இவரை சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக நியமிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளாக உருவெடுத்துள்ள, போதைப்பொருள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க முடியும் என முதலமைச்சர் விஜய் நம்புகிறாராம். தமிழ்நாட்டின் எல்லைகளில் ஆய்வு மற்றும் சோதனைகளை தீவிரமாக்கி மாநிலத்திற்குள் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், வியாபார மையங்களை கண்டறிந்து முடக்கவும், அதன் மூலம் மாநிலத்திற்குள் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், CBI மற்றும் BSF பணி அனுபவம் கைகொடுக்கும் என்று கருதி மகேஷ் குமார் அகர்வாலை புதிய அரசாங்கம் தேர்வு செய்துள்ளதாம்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















