'மோசடி செய்பவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு?' அண்ணாமலையை கடுமையாக சாடிய கே.எஸ்.அழகிரி

"மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற காரணத்தினாலே எதை வேண்டுமானாலும் செய்யலாம், என்ற ஆணவத்தோடு அண்ணாமலை செயல்படுவாரேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Continues below advertisement

கர்நாடக மாநிலம் சன்னகிரி தொகுதியின் பாஜக எம்எல்ஏ, மடால் விருபக்‌ஷப்பா கர்நாடக அரசின் சோப் மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவன தலைவராக உள்ள நிலையில், அவரது மகன் பிரசாந்த், சோப் நிறுவனத்தின் ரூ.3 கோடி மதிப்பிலான டெண்டரை ஒதுக்க தனியார் நிறுவனத்திடம் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.  அந்த நிறுவனத்தினர் முதல்கட்டமாக ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுக்க பெங்களூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்தபோது பிரசாந்த் வசமாக சிக்கினார்.

Continues below advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரது அலுவலகத்துக்குள் நுழைந்து கைது செய்ததுடன், 3 பைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.40 லட்சம் லஞ்சப் பணத்தையும் கைப்பற்றினர். அதோடு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.8 கோடியை கைப்பற்றினர். சமீபத்தில் அதானிக்குச் சொந்தமான நிறுவனங்கள், பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.

கே.எஸ்.அழகிரி அறிக்கை

இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பிய நிலையில் அதானி பிரச்சினையை முன்வைத்து மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.  இவற்றையெல்லாம் இணைத்து தமிழ் நாட்டு பாஜக தலைவர்களும் இதுபோன்ற ஊழல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி ஒரு அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், "ராகுல்காந்தி அவர்களின் உரையில் 2014 ஆம் ஆண்டில் உலக பணக்காரர்கள் வரிசையில் 609 ஆவது இடத்தில் இருந்த கௌதம் அதானி, 2022 ஆம் ஆண்டு இறுதியில் உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு எப்படி உயர்ந்தார் ? அவரது உயர்வில் பிரதமர் மோடியின் பங்கு என்ன ? என்று குற்றச்சாட்டு கூறியதற்கு இதுவரை பதில் இல்லை", என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக ஊழல் பேர்வழிகள் புகலிடம்

பின்னர் கர்நாடக எம்எல்ஏ மடால் விருபக்‌ஷப்பா குறித்த குற்றச்சாட்டையும் குறிப்பிட்டதோடு, தமிழ்நாடு பாஜக குறித்த தனது குற்றச்சாட்டுக்கு வருகிறார். அதில், "தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு ஊழல் பேர்வழிகள், சமூக விரோதிகள் போன்றோர் தங்களை பாதுகாத்துக் கொள்ள புகலிடமாக பாஜகவில் சேர்வது தொடர்ந்து நடைபெற்று வருவதை அனைவரும் அறிவார்கள். கடந்த ஒருசில நாட்களுக்கு முன்பு பொருளாதார குற்றப்பிரிவினரால் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு பிரிவு செயலாளராக இருந்த கே. ஹரிஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரூபாய் 2400 கோடி அளவிற்கு முதலீட்டாளர்களை மோசடி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிற ஆரூத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர் தான் கே. ஹரிஷ். இவர் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 210 கோடி முதலீடு பெற்றிருக்கிறார்", என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: Congress Mps Resign : ’ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு’ காங்கிரஸ் எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு ?

கே.ஹரிஷ் செய்த மோசடி

மேலும் கே. ஹரிஷ் குறித்து குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 2022, ஜூன் 2 ஆம் தேதி பாஜகவின் விளையாட்டுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். "இந்த நியமனத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே பொருளாதார குற்றப்பிரிவு கே. ஹரிஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடிக் கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 2020 முதல் மே 2022 வரை முதலீட்டாளர்களிடமிருந்து டெபாசிட்டாக பெரும் தொகை திரட்டப்பட்டிருக்கிறது. இந்த டெபாசிட் தொகைக்கு 25 முதல் 30 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி, கோடிக்கணக்கான ரூபாயை முதலீடாக திரட்டி மோசடி செய்திருக்கிறார். பொருளாதார குற்றப்பிரிவு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கே. ஹரிஷ் என்பவருக்கு பதவி கொடுப்பதில் பாஜகவின் விளையாட்டு பிரிவு தலைவர் எஸ். அமர்பிரகாஷ் ரெட்டி மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார்", என்றுள்ளார்.

ஊழல் செய்தவருக்கு ஏன் அடைக்கலம் கொடுக்கிறீர்கள்?

மேலும், "முதலீட்டாளர்களிடம் ஹரிஷ் மோசடி செய்துள்ளார் என்று பத்திரிகையாளர்கள் அமர்பிரசாத் ரெட்டியை கேட்ட போது, இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. அவர் விளையாட்டுத்துறையில் மிகச் சிறந்த வல்லவர், அவர் எந்த குற்றத்தையும் நிகழ்த்தவில்லை என்று ஒரு மோசடி குற்றவாளியை பாதுகாக்கிற முயற்சியில் அவர் ஈடுபட்டார். முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூபாய் 2400 கோடி அளவிற்கு மோசடி செய்த கே. ஹரிஷ் என்பவரை பாஜகவில் சேர்த்து, பதவி கொடுத்து பாதுகாப்பதில் பாஜக தலைவர் அண்ணாமலையும், விளையாட்டுத்துறை தலைவர் எஸ். அமர்பிரசாத் ரெட்டியும் இணைந்து செயல்பட்டதில் பின்னணியாக வெளிவருகிற தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை தருகின்றன.

மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களை பாஜக தலைமை ஏன் கட்சியில் சேர்க்கிறது ? ஏன் பாதுகாக்கிறது ? மோசடி குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட கே. ஹரிஷ் என்பவருக்கும், தமிழக பாஜக தலைமைக்கும் உள்ள உறவு குறித்து விளக்க வேண்டிய பொறுப்பு அதன் தலைவர் அண்ணாமலைக்கு இருக்கிறது. இதற்கான உரிய விளக்கத்தை அவர் வெளியிடுவாரா ? மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற காரணத்தினாலே எதை வேண்டுமானாலும் செய்யலாம், எவரை வேண்டுமானாலும் கட்சியில் சேர்க்கலாம் என்ற ஆணவத்தோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுவாரேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்", என எச்சரித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola