ஈரோடு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வே.ரா மறைந்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. அப்போது, காங்கிரசும் – அதிமுகவும் நேரடியாக களம் கண்டன. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


அதிமுக – பாஜக தலைவர்கள் இடையே வலுக்கும் வார்த்தை போர்


அப்போது அதிமுகவிற்கு பாஜக ஆதரவு அளித்தது. அதன் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்ததில் இருந்து இரு கட்சி தலைவர்களுக்கும் இடையே கடும் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட் என்னவென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தெரியும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அண்ணாமலை பேசியுள்ளார்


கண்ணாடியை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேட்க வேண்டும்


விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”எடப்பாடி பழனிசாமி கண்ணாடியை எடுத்து அவரது முகத்தை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். நல்லா பாத்துகிட்டா, அந்த கண்ணாடி எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளராக அவர் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லும்.


எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம். எடப்பாடி பழனிசாமியின் சரித்திரம் என்னவென்று எல்லோருக்கும் சொல்லியாக வேண்டும். பாஜக தேசிய அளவில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இவரது சாதனை என்ன? எத்தனை தோல்வி, உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத் தேர்தல் என எல்லாவற்றிலும் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்விதான்.


ஈரோடு சீக்ரெட்டை உடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் அண்ணாமலை


ஈரோடு என்னுடைய சொந்த ஊரு, சொந்த கோட்டை நான் தான் நிக்கனும் அப்டின்னு என்கிட்ட சொன்னாரு. ஆமா, அந்த சீக்ரெட் என்னென்னு நான் இப்ப சொல்றேன். இடைத் தேர்தல் அப்ப எனக்கு போன் செஞ்சு ஈரோடு இடைத் தேர்தல் ல ஓபிஎஸ் நிக்க வேண்டாம்னு சொல்லுங்க அப்டின்னு என்கிட்ட கேட்டாரு எடப்பாடி பழனிசாமி.  நான் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன். என்னுடைய வேட்பாளர் ஜெயிக்கனும்னா அதிமுக மட்டும் நிக்கனும் அதுக்கு வழி செஞ்சு கொடுங்க அப்படின்னு என்கிட்ட போன் மூலம் கேட்டவருதான் எடப்பாடி பழனிசாமி. இதுதான் அந்த சீக்ரெட்


ஓபிஎஸ்-க்கு என்ன மரியாதையை ஈபிஎஸ் கொடுத்தார் ? – அண்ணாமலை


ஈபிஎஸ் சொன்னத நான் ஓபிஎஸ் அண்ணன் கிட்ட சொன்னேன். கண்ணியமாக, கம்பீரமாக அதிமுக தொண்டர்கள் அத்தனை பேரும் இரட்டை இலையில் ஓட்டு போட வேண்டும் என்பதற்காக ஒதுங்கி நின்றார். ஆனால், அவருக்கு என்ன மரியாதையை ஈபிஎஸ் கொடுத்தார் ?






விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் ? – அண்ணாமலை கேள்வி


சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லிவிட்டுதானே விக்கிரவாண்டி இடைத் தேர்தலை எடப்பாடி புறக்கணித்தார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலையும் அவர் புறக்கணிப்பாரா என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி என்பவர் ஒரு நம்பிக்கை துரோகி என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்