தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சி நிர்வாகிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் செய்தியாளர்களை சந்தித்தார்.




அப்போது, தேனி மாவட்ட நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள்  தான் அங்கு சென்றுள்ளனர். அவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. இரண்டு பேர் மட்டும் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் சென்றுள்ளார்கள். மொத்தமுள்ள 61 நிர்வாகிகளில் 59 பேர் எங்களுடன் தான் இருக்கின்றனர். அவர்கள் போட்ட கையெழுத்து இதோ என்று காட்டினார்.


6 மாவட்ட கழக நிர்வாகிகள் (ஒருவர் எடப்பாடி பக்கம் சென்றுவிட்டார்), பொதுக்குழு  உறுப்பினர்கள் 4 பேர், 16 ஒன்றிய கழக செயலாளர்கள், 9 நகர செயலாளர்கள் (ஒருவர் எடப்பாடி பக்கம் போய்விட்டார்), 22 பேரூராட்சி செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நிற்பதாக தெரிவித்தார். தேனி மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வரும் 23ஆம் தேதி அன்று அதிமுக பொதுக்குழு எதற்காக கூட்டப்படுகிறது என்றால்? ஜெயலலிதா இறந்த பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்தார்கள்.




அதன்பிறகு கிளை கழகத் தேர்தல், ஒன்றிய கழக தேர்தல், பேரூராட்சி தேர்தல், நகரத் தேர்தல், மாவட்ட தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. இவை அனைத்திற்கும் ஒப்புதல் பெறுவதற்காக தான் பொதுக்குழு கூட்டப்படுகிறது. இதில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படாது. அப்படி கொண்டு வந்தால் தேனி மாவட்ட நிர்வாகிகள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேசமயம் யூகத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார். எங்களை பொறுத்தவரை ஒரேவொரு விஷயம் தான். கட்சி ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சியில் இருந்தவர்கள், தற்போது விலகி இருப்பவர்கள் என அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கூட்டம் முடிவடைந்த உடன் எடப்பாடியை சந்தித்த தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஓபிஎஸ் வீட்டில் நடந்த கூட்டத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா கலந்து கொண்டது கவனிக்கத்தக்கது.




ஆனால் தேனி மாவட்ட அதிமுக பொருளாளர் சோலை ராஜ், தேனி மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் முறுக்கோடை ராமர், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், தேனி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் செந்தட்டி காளை, கம்பம் முன்னாள் ஒன்றிய செயலாளர் இளைய நம்பி, பெரியகுளம் ஒன்றிய கழக முன்னாள் செயலாளர் அண்ண பிரகாஷ், முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை. அதாவது, கையெழுத்து போட்டு விட்டு சில நிர்வாகிகள் அணி மாறியிருக்கலாம் சொல்லப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண