நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதாவிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிக்கே பாதுகாப்பு இல்லை என்ற கேள்வி தற்போது பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
நடைப்பயிற்சியில் ஈடுபட்டபோது நகை பறிப்பு
கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, மயிலாடுதுறை தொகுதி எம்.பி. சுதா டெல்லியில் தங்கியுள்ளார். இன்று காலை வழக்கம் போல் நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்புக்கு அருகில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென அவரை நோக்கி வந்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியைப் பறிக்க முயற்சித்தார்.
இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா, அந்த நபரிடம் இருந்து தனது சங்கிலியை காத்துக்கொள்ள கடுமையாகப் போராடினார். ஆனால், அந்த நபர் அவரைத் தாக்கி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 4.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.
காயம் முற்ற எம்பி காவல்துறை விசாரணை
இந்தச் சம்பவத்தில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர், டெல்லியில் உள்ள சாணக்யபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, செயின் பறிப்பில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும் குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு குறித்த கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல், டெல்லியின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லியில், உயர் பதவிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கே இதுபோன்ற தாக்குதல் நடப்பது, சாதாரண மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம், டெல்லியின் முக்கியப் பகுதிகளில் கூட குற்றச் செயல்கள் தங்குதடையின்றி நடக்கின்றன என்பதற்கான ஒரு சாட்சியாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலர் குற்றச்சாட்டியுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரபரப்பு
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். “எம்.பி.க்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள் நிலை என்ன?” என்ற கேள்விகளுடன் பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், நாட்டின் தலைநகரில் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையின் தொடர் நடவடிக்கை
எம்.பி. சுதாவிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய உள்ளதாக சமூக ஆர்வலர்கள் , எதிர்கட்சியினர் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.