அறிவிப்பு கொடுத்து அதை திரும்ப பெறக்கூடிய அரசாகதான் திமுக அரசு உள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


திருச்சி விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:


இப்போது சொல்லக்கூடாது:


புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனை முற்றிலும் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது. அங்கு முறையாக மருத்துவம் இல்லை என்று கூறி தமிழகத்திலிருந்து ஒரு சிலர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. ஆளுநர் பதவியே தேவை இல்லை என்று, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னர் நீங்கள் இப்போது சொல்லக்கூடாது. எதிர்க்கட்சியாக இருந்த போது ராஜ்பவன் வாசலை நீங்கள் மிதிக்காமல் இருந்திருக்கலாமே? அப்போது எதற்கு எடுத்தாலும் ராஜ் பவன் வாசலை மிதித்தீர்கள்.


எதிர்க்கட்சியாக இருந்தபோது உங்களுக்கு ஆளுநர் தேவைப்பட்டார். இன்று ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஆளுனர் தேவைப்படவில்லையா?. இதனால் உங்கள் எண்ணத்தில் நிலையற்ற தன்மை இருக்கிறது என்றும், நீங்கள் நேரத்திற்கு ஏற்றவாறு பேசுகிறீர்கள் என்பதும் தெரிகிறது. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டது ஏன் என்கிற கேள்விக்கு? ஆன்லைன் தடை சட்டத்திற்கு மட்டு மல்ல, மற்ற சில சட்ட மசோதாக்களுக்கும் கூட அவர் கால அவகாசம் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஒவ்வொன்றையும் பரிசீலனை செய்வதற்கு கால அவகாசம் தேவைப்பட்டு இருக்கலாம்.


கருத்து சுதந்திரம்:


 ஆளுநரை முதலில் ஆளுநராக நடத்துங்கள். எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. ஆளுநருக்கும்  அவர் கருத்துகளை கூற கண்டிப்பாக உரிமை உண்டு. ஆளுநரின் கருத்துகளுக்கு நீங்கள் எதிர் கருத்து கூறலாம். ஆனால் அவர் கருத்தே கூறக்கூடாது என நீங்கள் எப்படி சொல்ல முடியும். அறிவிப்பு கொடுத்து செயல்படுத்தக்கூடிய அரசை பார்த்திருக்கிறோம். ஆனால் அறிவிப்பு கொடுத்து அதனை திரும்ப பெரும் அரசாக தான் தி.மு.க. அரசு உள்ளது என்பது எனது கருத்து. 


தீவிரவாதத்தை எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது என்பதே பிரதமரின் கருத்து. கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நானும் பார்க்கலாம் என்று இருக்கிறேன். திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும். ஆனால் இந்த படத்திற்கு மட்டும் தடை கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எந்த வகையிலும் தீவிரவாதம் சார்ந்த கருத்துகளை அனுமதிக்க கூடாது. குறிப்பாக இளைஞர்களை பாதிக்கக் கூடாது என்று கூறினார்.