அச்சுறுத்தும் வடமாநில தொழிலாளர்கள் - கோடியில் ஓட்டுகள்? ஷாக்கில் அரசியல் கட்சிகள், தமிழக அரசு கணக்கீடு
TN Migrant Workers: தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்ய, மாநில அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.

TN Migrant Workers: புலம்பெயர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வாக்குரிமை அளிக்கும் சர்ச்சைக்கு மத்தியில், அரசு இந்த கணக்கெடுப்பு நடவடிகையை எடுத்துள்ளது.
வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை:
பல்வேறு வடமாநிலங்களை காட்டிலும், கல்வி அறிவு மிக்க தமிழ்நாட்டில் தொழில் வளம் அதிகளவில் காணப்படுகிறது. அந்த பகுதிகளில் திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை தாண்டி, உடலுழைப்பை மட்டுமே சார்ந்த பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. இதனை நம்பி ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் தான், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவரவர் வசிக்கும் மாநிலங்களிலேயே வாக்குரிமை அளிக்க தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிழைக்க வந்தவர்கள் எப்படி நமது மாநிலத்தில் ஆட்சியாளர்களை தேர்வு செய்ய முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோடிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை?
ஆந்திரா, மேற்கு வங்கம். உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் வடகிழக்கு பிராந்தியம் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து குடியேறி வருகின்றனர். கடந்த 2015-16ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 65 லட்சத்து 74 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால், அந்த எண்ணிக்கை கோடியை தாண்டி இருக்கும் என கணிக்கப்படுகிறது. அவர்களுக்கு எல்லாம் வாக்குரிமை அளித்தால், தமிழ்நாட்டின் அரசியல் சூழலே மாற்றும் காணும் நிலை நிலவுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்ய டெண்டர் அரசு தரப்பில் விடப்பட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர் தொழிலாளர்களின் பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
திட்டத்தின் இலக்கு என்ன?
மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் நடைபெற உள்ள ஆய்வில், தனிப்பட்ட புலம்பெயர்ந்தோரின் செயல்முறை, ஆட்சேர்ப்பு முறை மற்றும் இடம்பெயர்வு வரலாறு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோரின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை பகுப்பாய்வு செய்து, வேலை செய்யும் இடம், வேலை நேரம், தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் பணியிட வசதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
அதன் மூலம், தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்களின் பணி மற்றும் வாழ்க்கை நிலைமைகள் குறித்த கொள்கை பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்குவதே இந்த கணக்கெடுப்பின் இறுதி நோக்கமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கணக்குகள்?
புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காகவே இந்த ஆய்வு நடத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இதில் பல அரசியல் கணக்கீடுகளும் இருப்பதாகவே கூறப்படுகிறது. உதாரணமாக கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் கடும் போட்டிக்கு மத்தியிலேயே வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கையின் போது சில சுற்றுகளில் பாஜக வேட்பாளரிடம் பின்னடைவை கண்டார். இதற்கு அந்த தொகுதியில் புதியதாக இணைந்த வடமாநில வாக்காளர்களே காரணமாக கூறப்பட்டது. ஒரு தொகுதிக்கே அப்படி என்றால், மாநிலம் முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளித்தால் ஒட்டுமொத்த அரசியல் சூழலையுமே அவர்கள் மாற்றும் சக்தியை பெறுவார்கள் என, அரசியல் கணக்கீட்டாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























