சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் கடந்த வாரம் அன்புமணியும், தினகரனும் அடுத்தடுத்து இணைந்த நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட மாநாடு இன்று நடந்தது. 

டபுள் எஞ்ஜின்:

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பாஜக - என்டிஏ டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம் என்று கூறினார். இவரது பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி கூறிய டபுள் எஞ்ஜினை டப்பா எஞ்ஜின் என்று விமர்சித்து பேசியுள்ளார். மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது!

டப்பா எஞ்ஜின்:

பிரதமரே, ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.

தமிழ்நாடு தலைகுனியாது:

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் #NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி சற்று பலவீனமான கூட்டணியாக கருதப்பட்ட நிலையில், தினகரன் மற்றும் அன்புமணியின் வருகை திமுக கூட்டணிக்கு சவால் தரும் வகையில் அதிமுக-வை மாற்றியுள்ளது.