TN By-Election: இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
TN By-Election: தமிழ்நாட்டில் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில், திமுக மற்றும் அதிமுகவின் ஆதிக்கம் எப்படி உள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

TN By-Election: தமிழ்நாட்டில் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில், எந்த கட்சி ஆதிக்கம் செலுத்தக்கூடும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதன் பிறகு மாநில அரசியலில் நாள்தோறும் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அதன் உச்சபட்சமாக அதிமுகவைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோக ஏற்கனவே முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குதிரை பேரம் காரணமாகவே எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டாலும், திமுக உடன் கூட்டணி அமைக்க முயன்றதால் ஏற்பட்ட அதிப்தி காரணமாகவே அதிமுகவில் இருந்து வெளியேறியதாக பதவி விலகியவர்கள் தெரிவிக்கின்றனர்.
தவெக சாதிக்குமா? திமுக கம்பேக்?
காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, கட்சி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை 107-லிருந்து 112 ஆக உயர்த்த ஆளுங்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக மேலும் வலுப்பெற வேண்டும் எனவும், கொளத்தூரில் ஸ்டாலின் கண்ட தோல்விக்க ஆளுங்கட்சியை வீழ்த்தி பழி தீர்க்க வேண்டும் எனவும் திமுக விரும்புகிறதாம். இதனால், ராஜினாமா செய்தது அதிமுக எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், இடைத்தேர்தலிலும் தவெக மற்றும் திமுக இடையிலேயே நேரடி போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருப்பது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில், காலியாக உள்ள 5 தொகுதிகளில் எந்த கட்சிகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளன என்ற விவரங்கள் போட்டியின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கிறது.
5 தொகுதிகள் - யாருக்கு சாதகம்?
1. திருச்சி கிழக்கு தொகுதி
கடந்த 1951ம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளி என அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில், 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு திருச்சி கிழக்கு என பெயர் சூட்டப்பட்டது. அதன் பின் 2011ம் ஆண்டு தொடங்கி இதுவரை 4 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. முதல் இரண்டு முறை அதிமுகவைச் சேர்ந்த ஆர். மனோகரன் மற்றும் என். நடராஜன் ஆகியோர் கைப்பற்றினர். 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கிய இனிகோ இருதயராஜ் வென்றார். இந்நிலையில் 2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடினார். போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கை அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
2. பெருந்துறை சட்டமன்ற தொகுதி
கடந்த 1957ம் ஆண்டு முதல் பெருந்துறை தொகுதி தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. அதில் பெரும்பாலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 2001ம் ஆண்டு முதல் நடைபெற்ற 7 தேர்தல்களில் ஒரு முறை கூட இங்கு திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. 2011 மற்றும் 2016 தேர்தல்களில் என்.டி. வெங்கடாசலம் என்பவரும், 2021 மற்றும் 2026 தேர்தல்களில் ஜெயக்குமார் என்பவரும் இந்த தொகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை அதிமுக சார்பில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
3. தாராபுரம் சட்டமன்ற தொகுதி
தாராபுரம் சட்டமன்ற தொகுதி எந்தவொரு கட்சிக்கும் வலுவான களமாக இல்லாமல், மாறி மாறி வெற்றி வாய்ப்பை கொடுத்துள்ளது. இதனால் இந்த தொகுதி எந்த கட்சிக்கான வலுவான கோட்டை என உறுதியாக கணிக்க முடியவில்லை.
| தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற கூட்டணி |
| 2001 | அதிமுக கூட்டணி (பாமக) |
| 2006 | திமுக |
| 2011 | அதிமுக |
| 2016 | திமுக கூட்டணி (காங்கிரஸ்) |
| 2021 | திமுக |
| 2026 | அதிமுக |
4. மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 2001ம் ஆண்டு முதல் 6 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் அதிமுக வேட்பாளர்கள் 4 முறை வெற்றி பெற்றுள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலா ஒரு முறை மட்டுமே இங்கு வெற்றி வாகை சூடியுள்ளது. இதனால் கிட்டத்தட்ட இது அதிமுகவின் கோட்டையாகவே கருதப்படுகிறது.
5. அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2001ம் ஆண்டு முதல் 6 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் அதிமுக வேட்பாளர்கள் 5 முறை வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக தனி செல்வாக்கு மிக்க நபராக உள்ள இசக்கி சுப்பையா மட்டுமே, மூன்று முறை அங்கிருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக ஒரே ஒரு முறை மட்டுமே இங்கு வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த தரவுகள் அடிப்படையில் இது அதிமுகவின் கோட்டையாகவே உள்ளது.
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
பொதுவாகவே இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகால தரவுகளை ஆராய்ந்தால் மேற்குறிப்பிடப்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தாராபுரத்தை தாண்டி மற்ற நான்கு தொகுதிகளிலும் அதிமுகவே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதாவது இந்த 5 தொகுதிகளும் பெரிய அளவில் திமுகவிற்கு சாதகமாக இருந்தது இல்லை என்பதை உணர முடிகிறது. ஆனாலும், கடந்த கால தரவுகளை எல்லாம் பொய்யாக்கி, திமுக அதிக இடங்களை வெல்லுமா? அல்லது பொதுத்தேர்தலில் கைப்பற்றிய 5 தொகுதிகளையும் அதிமுகவே மீண்டும் சொந்தமாக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















