Udhayachandran IAS : ’கட்டம் கட்டிய முதல்வர் விஜய்? காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் - பின்னணி என்ன?
”விஜய் தலைமையிலான அரசு, உதயசந்திரன் போன்ற ஆளுமைகளை, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தக்க வைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், யார் சொல்வதையோ கேட்டுக்கொண்டு அவரை அவசர, அவசரமாக மாற்றியிருக்கிறது”

திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனிச் செயலாளராகவும் பின்னர் நிதித்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்ட உதயசந்திரன் ஐ.ஏ.எஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டிருக்கிறது.
என்ன காரணம் ?
திமுக ஆட்சியில் முக்கிய முடிவுகளையெல்லாம் உதயசந்திரனே எடுத்ததாகவும், அவர்தான் திமுக ஆட்சியையே நடத்தியதாகவும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக, திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் மூலம் உதயசந்திரன் பெரும் முயற்சித்ததாகவும் கூறப்பட்ட நிலையில், விஜய் முதலமைச்சராகியதும் வெளியாகியுள்ள முதல் மாற்றத்திலேயே உதயசந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டப்பட்ட உதயசந்திரன்
அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக உதயசந்திரன் சிறப்பாக செயல்பட்டபோது அவரின் செயல்பாடுகளை பிடிக்காத அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரு அவருக்கு தடை ஏற்படுத்துவதற்காகவே பள்ளிக் கல்வித் துறைக்கு முதன்மை செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி, அதற்கு பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் என்பவரை நியமனம் செய்தனர். பள்ளிக் கல்வித் துறையை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருந்த உதயசந்திரன், அதன்பின்னர் பாடத்திட்டம் தொடர்பான பணிகளை மட்டுமே கவனிப்பார் என்றும் அவர் பிரதீப் யாதவிற்கு கீழ் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டு, அவர் ஓரங்கட்டப்பட்டார்.
திமுக ஆட்சியில் முக்கியத்துவம்
இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்ததும் உதயசந்திரனை தனது தனிச் செயலாளராக நியமித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனடிப்படையிலேயே பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் அதிரடி மாற்றங்கள், பேசப்படும் திட்டத்திற்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இப்படியான மிகப்பெரிய ஒரு புரட்சிக்கு வித்திட்டவராக உதயசந்திரன் திமுக ஆட்சியில் பாராட்டப்பட்ட நிலையில், உதயசந்திரனை பிடிக்காத அதிகாரிகள் மற்றும் அவரின் கண்டிப்பான அனுகுமுறைகளை வெறுத்த அமைச்சர்கள், உதயசந்திரன் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலிடம் அடுக்கத் தொடங்கினர். அதனை விரும்பாத உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் தன்னை வேறு துறைக்கு மாற்றும்படி அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பலமுறை வலியுறுத்தினார். ஆனால், விடாப்பிடியாக இருந்த மு.க.ஸ்டாலின், உதயசந்திரனையே தன்னுடைய செயலாளராக தக்கவைத்துக்கொண்டார்.
நிதித்துறை செயலாளராக நியமனம்
அதன்பின்னர், பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் நிதித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்ற்றப்பட்டு, தங்கம் தென்னரசு நிதித்துறை அமைச்சராக நியமிமிக்கப்பட்டபோது, அந்த துறையின் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் உதயசந்திரன். குறிப்பாக, தமிழ்நாட்டின் நிதிச்சுமையை குறைப்பதற்கும், வருவாய்களை பெருக்குவதற்கும் பல்வேறு திட்டங்களையும், பல கடுமையான கட்டுப்பாடுகளை தன்னுடைய பணிக்காலத்தில் உதயசந்திரன் விதித்திருந்தார்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட உதயசந்திரன்
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள விஜய் தலைமையிலான அரசு, உதயசந்திரன் போன்ற ஆளுமைகளை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தக்க வைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், யார் சொல்வதையோ கேட்டுக்கொண்டு அவரை அவசர, அவசரமாக மாற்றி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்





















