TN Ministers: எங்க சார் இருக்கீங்க? - வேலை நடக்குதா? பாக்கவே முடியலையே? அமைச்சர்களை தேடும் மக்கள்..!
Tamil Nadu Cabinet Ministers: தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள சிலர் நான்கு ஆண்டுகளாகியும் பொதுவெளியில் தலையை கூட காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது.

TN Ministers: தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தும் செய்திகளில் கூட பெரிதும் இடம்பெறாத அமைச்சர்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
முதலமைச்சர் ஸ்டாலினின் அமைச்சரவை:
10 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு 2021ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சி அமைத்தபோது, தங்களுக்கு வாக்காளிக்காதவர்களுக்கும் சேர்த்து தனது தலைமையிலான அரசு உழைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரைத்தார். ஆரம்பத்தில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்படது. அதற்கு அமைச்சரவையில் உள்ள அனைவருமே முதலமைச்சருக்கு துணையாக இருப்போம் என தக்-லைஃப் பதில் எல்லாம் கொடுத்தார். அதன்படி துணையாக இருந்தனரா? என்பது தெரியவில்லை. ஆனால், அமைச்சர்களால் முதலமைச்சர் பல இன்னல்களை எதிர்கொள்வதாக அவரே மேடையிலேயே பேசியுள்ளார்.
7வது முறையாக மாற்றம்:
தமிழ்நாடு அமைச்சரவை அண்மையில் 4 ஆண்டுகளில் ஏழாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. அதில் பெரிய மாற்றங்கள் இல்லாததால், கடந்த 4 ஆண்டுகளாக அமைச்சர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த 10 மாதங்களுக்கும் பதவியில் தொடர இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் சிலர் திறமையான செயல்பாடு காரணமாகவும், முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவியை வகிப்பதாலும், சிலர் ஊழல் குற்றச்சாட்டுகளாலும், சிலர் ஆபசமான பேச்சுகளாலும், சிலர் பொதுவெளியில் நடந்து கொண்ட விதம் காரணமாகவும் மற்றும் சிலர் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாகவும் தமிழ்நாட்டு மக்களிடையே அறிமுகம் பெற்றுள்ளனர். ஆனால் சிலரோ, “இருக்கிற இடமே தெரியாம இருந்துட்டு போயிடலாம்” என இன்றளவும் செயல்பட்டு வருவதாக கட்சியினரே சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
எங்க சார் இருக்கீங்க?
இந்த பட்டியலில் பல மூத்த மற்றும் முக்கிய அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். எம்.எல்.ஏ பதவி என்பது ஒரு தொகுதிக்கானது மட்டுமே, ஆனால் அமைச்சர் என்பவர் ஒட்டுமொத்த மாநிலத்திற்குமான பொறுப்பை வகிப்பவர். ஆனால், குறைந்தபட்சம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழும் துறைசார் அரசு நிகழ்ச்சிகளில் கூட சில அமைச்சர்களை காண முடிவதில்லை. எங்க சார் இருக்கீங்க? என கேள்வி கேட்கும் வகையில் தான் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளன. துண்டு செய்திகளில் கூட அவர்கள் வருவதில்லை என்பதே உண்மை. ஆட்சிக்கு வந்தபோது, ”அமைச்சர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, திறம்பட செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்” என்றெல்லாம் முதலமைச்சர் எச்சரித்தார். அதெல்லாம் உண்மை என்றால் என்றோ பலர் அமைச்சரவையில் இருந்து தூக்கி எறியப்பட்டு இருக்க வேண்டும்.
பார்க்கவே முடியாத அமைச்சர்கள்..!
- கால்நடை வளர்ச்சி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
- வன மற்றும் காதி அமைச்சர் ராஜகண்ணப்பன்
- கைத்தறி அமைச்சர் காந்தி
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
- வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி
- கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பண்
- தமிழ் வளர்ச்சி அமைச்சர் சாமிநாதன்
- தொழிலாளர் நல அமைச்சர் கணேசன்
- ஆதிதிராவிடர் நல அமைச்சர் மதிவேந்தன்
- சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சர் தாமோ. அன்பரசன்
- மனிதவள அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
துறைகளில் வேலை நடக்கிறதா?
மேற்குறிப்பிடப்பட்ட அமைச்சர்கள் நான்கு ஆண்டுகளாகியும், மக்களால் பெரிதும் அறியப்படாதவர்களாக இன்றளவும் தொடர்கின்றனர். அவர்கள் வகிக்கும் துறைகள் எல்லாம் அமைச்சர்கள் தலைமையில் திறம்பட செயல்படுகிறதா? என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
- கடந்த ஆட்சியின்போது பேரிடர் மேலாண்மை அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயக்குமார் மழைக்காலத்தில் மணிக்கு ஒருமுறை தொலைக்காட்சியில் தோன்றி, அப்டேட்டுகளை வழங்குவார். ஆனால் தற்போதைய அமைச்சர் கே. கே.எஸ்.எஸ். ஆர்., ராமச்சந்திரனை இயல்பாக காண்பதே அரிதாக உள்ளது.
- தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அனிதா கிருஷ்ணன், அந்த மாவட்டமே வெள்ளத்தில் தத்தளித்தபோது கூட வெளியே தலை காட்டவில்லை.
- ஆட்சி தொடங்கிய காலத்தில் சர்ச்சையில் சிக்கி ஃப்ளைட் மோடில் சென்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் அதன்பிறகு லைம்-லைட்டிற்கு வந்ததாகவே தெரியவில்லை
- அண்மையில் மதுவிலக்குத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்ட பிறகு தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு முத்துசாமி என்பவரது பெயரே செய்திகளில் கூட அடிபட்டது
- அண்மையில் தவெக தலைவர் விஜயை விமர்சித்தபோது தான் காந்தி என ஒருவர் அமைச்சரவையில் இருப்பதே சிலருக்கு தெரிய வந்தது
இதேபோன்று தான் மற்ற அமைச்சர்களின் செயல்படுகளும் உள்ளன.
ஸ்டாலினின் கனவு பலிக்குமா?
திமுக மீண்டும் ஆட்சி அமைக்குமா? என்ற கேள்விக்கு அண்மையில் பதில் அளித்த முதலமைச்ச்ர் ஸ்டாலின், “ 2026ல் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என குறிப்பிட்டு இருந்தார். அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பே, அமைச்சர்கள் வசம் தான் உள்ளது. ஆனால், சில அமைச்சர்கள் இருப்பதே மக்களுக்கு தெரியாத நிலையில், அரசின் திட்டங்கள் எப்படி அனைத்து தரப்பு மக்களையும் அடைந்து இருக்கும்? இவர்களை நம்பி மேடைக்கு மேடை 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முழங்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.





















