இலங்கை சபாநாயகர் வீட்டில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இணையம் வழியாக கலந்து கொண்டனர். அதில், அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட ரணில் பிரதமர் பதவியிலிருந்து விலக மறுப்பு தெரிவித்துள்ளதாக எம்பி ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.




இந்நிலையில், பதவியிலிருந்து விலக தயார் என ரணில் தெரிவித்திருப்பதாக இலங்கை பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், பெரும்பான்மை தலைவர்களின் கோரிக்கையின்படி பதவி விலக பிரதமர் மற்றும் அதிபருக்கு சபாநாயகர் கடிதம் எழுத முடிவு செய்துள்ளார்.


முன்னதாக, அரசியலமைப்பின்படி தற்காலிக அதிபராக சபாநாயகரை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து கட்சி அரசை அமைக்க தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


முன்னதாக, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு மதிப்பளிப்பதாக அதிபர் கோட்டாபய ராஜபக்சே தெரிவித்திருந்தார். அதிபரின் முடிவு குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.




இச்சூழலில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று நடைபெறும் ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று மாலை 04.00 மணிக்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல், நாட்டில் நிலவி வரும் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக அவசர கூட்டத்திற்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.


அதிபரின் செயலகம் மற்றும் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையை இன்று முற்றுகையிட்ட பொது மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து, சிறப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 




முன்னதாக, உளவுத்துறையிலிருந்து தகவல்கள் கிடைத்ததையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகையிலிருந்து ராணுவ தலைமையகத்திற்கு நேற்றிரவு தப்பி சென்றதாக செய்தி வெளியாகியுள்ளது. சனிக்கிழமை போராட்டத்தை சட்ட விரோதமாக அறிவிக்க கோரிய காவல்துறையின் கோரிக்கையை நீதிபதிகள் மறுத்துள்ளனர்.


இதற்கு மத்தியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோத்தபய அதிபர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளர். இச்சூழலில், அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதான எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயா மறுத்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண