ஆட்சியை பிடித்த தவெக

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக- அதிமுக நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பமாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது தவெக, இதனையடுத்து திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது தவெக, நேற்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், இன்று புதிதாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டர். இந்த நிலையில் கடந்த முறை எதிர்கட்சி என்ற அந்தஸ்தை பெற்ற அதிமுக இந்த முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Continues below advertisement

அதிமுகவில் உட்கட்சி மோதல்

அந்த வகையில் அதிமுக, பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகளை இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இதில் 53 தொகுதிகளில் மட்டுமே அதிமுக கூட்டணி கைப்பற்றியது, இதில் பாமக 4 இடங்களிலும், பாஜக 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் அதிமுகவில் உட்கட்சி மோதல் மீண்டும் தலை தூக்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக தினந்தோறும் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிமுக தலைமையை மாற்ற வேண்டும் என விவாதம் நடைபெற்றது. 

தலைமைதாங்கும் எஸ்பிவி, சிவிஎஸ்

அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியானது உருவானது. இந்த அணியின் கூட்டமானது சி.வி.சண்முகம் அலுவலகத்திலும் நடைபெற்றது.  47 அதிமுக எம்எல்ஏக்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் இந்த அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் எதிர்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Continues below advertisement

அந்த வகையில் கடந்த 4 நாட்களாக திரைமறைவில் நடைபெற்று வந்த இந்த மோதல் இன்று சட்டசபையில் வெளிச்சத்திற்கு வந்தது. இதன் படி, சட்டமன்றத்திற்குள்‌, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் போது,  ஒரு தரப்பு எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணியுடன் ஒரு தரப்பு எம்எல்ஏக்களும் வந்தனர். இதேபோல், சி.வி.சண்முகமும் தனியாக சட்டமன்றத்துக்கு வருகை தந்தார்.

சட்டமன்ற கட்சி தலைவர் யார்.?

அதேபோல், எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி எடுக்க சென்றபோது ஒரு சிலர் மட்டுமே மேஜையை தட்டினார்கள். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவிவரும் நிலையில் சட்டப்பேரவையிலும் அது எதிரொலித்தது. மேலும் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை சட்டப்பையில் இருந்து வந்த நிலையில் அதனை அகற்றிவிட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம்பிடிக்க காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் தான்  தமிழக சட்டமன்றத்தில் அதிமுக  சட்டமன்ற கட்சி தலைவர் யார்.? என முடிவு செய்யப்படாமல் இழுபறியாக நீடித்து வருவது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.