தேவகோட்டையில் சீமான் வாக்கு சேகரிப்பு.. ஜமாத் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை - என்ன செய்ய போகிறேன் என்பதை உடைத்துச் சொன்னார் !
இந்த வேலைவாய்ப்பு, அந்நிய நாடுகளுக்குப் போய் அந்நியமாக வாழ வேண்டிய நிலையை உருவாக்கியது. நம் தாய் நிலத்தை விட்டு வெளியேறி அந்நிய நாடுகளுக்குப் போகிறோம். - சீமான் வேதனை.

அவரவர் வாழ்விடத்திலே அரசு வேலை, இடமும் வளமும் சார்ந்த தொழிற்சாலை வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம். - சீமான் கொடுத்த உறுதி.
தேவகோட்டைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை வாக்கு சேகரிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேவகோட்டை வருகை தந்த சீமான் பெரிய பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஜமாத் பொதுமக்களின் சார்பாக கேட்கப்பட்ட கேள்விகள் தமிழ்நாட்டிலே இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு இருக்கு. அதை முடிஞ்ச வரைக்கும் எண்ணிக்கைக்குத் தகுந்த மாதிரி 7 சதவீதமாக உயர்த்தித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு சீமான் தெரிவிக்கையில் இடப்பகிர்வு இடஒதுக்கீடு என்பதில் நம் உடன்பாடு இல்லை. சமபங்கு என்பதுதான் நம்முடைய உடன்பாடு, உரிய உரிமைதான், அந்தந்தக் குடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நமது ஆட்சி வரும்போது உரிய இடப்பகிர்வு பிரித்துக் கொடுக்கப்படும் என்கிற உறுதியை என் இனம் சார்ந்த மக்களுக்குத் சொல்கிறேன். நமது ஆட்சி வரும்போது உறுதியாக அவரவருக்கு உரிய இடங்கள் முறையாகப் பகிரப்படும் என்கிற உறுதியை அல்லா மீது ஆணையாக நான் சொல்கிறேன், என்றார்.
இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு தொழிற்சாலை பற்றிய கேள்விக்கு
இந்த வேலைவாய்ப்பு, அந்நிய நாடுகளுக்குப் போய் அந்நியமாக வாழ வேண்டிய நிலையை உருவாக்கியது. நம் தாய் நிலத்தை விட்டு வெளியேறி அந்நிய நாடுகளுக்குப் போகிறோம். அந்நிய மாநிலங்களில் இருந்து நம் தாய் நிலத்தை நோக்கி வேலை வாய்ப்பைத் தேடி வந்து ஆக்கிரமிக்கிறார்கள். நம்முடைய வாழ்விடத்தை, நம்முடைய வேலைகளைச் சுருக்கித் தட்டிப் பறிக்கிறார்கள். இந்தச் சூழலில் நம்முடைய ஆட்சி மலரும்போது என்ன சொல்லப் போறோம்ன்னா, அவரவர் வாழ்விடத்திலே அரசு வேலை, இடமும் வளமும் சார்ந்த தொழிற்சாலை வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம். அதை எப்படிச் செய்யப் போறேன்கிறதை ஆட்சியின் வரைபு நான் வெளியிடுவேன். வரைபடம் போட்டு காட்டுவேன் எப்படித் தேவைப்பட்ட இடத்திலே, காரைக்குடியில் எப்படிக் கொடுப்பேன், சிவகங்கையில் எப்படிக் கொடுப்பேன் என எல்லா இடத்தையும் காட்டும்போது உங்களுக்கு நம்பிக்கை வரும். அதனால அதைப் பற்றி கவலைப்படாதீங்க. நம் அரசு நமக்காக நாம் உருவாக்குகிற அரசு. அது மக்களின் நலனைத் தவிர வேறு எதையும் முதன்மையாகச் சிந்திக்காது.
என்றும் கூறினார். உடன் கட்சியைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஜமாத் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் இருந்தனர்
ட்ரெண்டிங் செய்திகள்






















