சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்திற்கு வருகை தந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொண்டர்கள் உற்சாகமான முறையில் வரவேற்பு அளித்தனர்.


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரிய பிரச்னையை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த இரு தினங்களாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் இருவரின் வீடுகளில் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதனிடையே அதிமுக பொதுக்குழு சென்னையில் 23 ஆம் தேதி கூட உள்ளது. இதைத் தொடர்ந்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவில ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என்பதே, அதிமுகவின் சாதாரண தொண்டனின் விருப்பமாக உள்ளது என்று அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மூலம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 



இந்த நிலையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சென்னையில் இருந்து சேலத்திற்கு வருகை தந்தார். அவருக்க  வழியெங்கும் தொண்டர்கள் உற்சாகமான முறையில் வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த அதிமுக இணை ஒருங்கிணைபாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்று திரண்டு வந்து வரவேற்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, வீரபாண்டி இராஜா, சேலம் தெற்கு பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், அதிமுக கவுன்சிலர்கள், சேலம் மாநகராட்சியின் முன்னாள் மேயர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்து அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இருப்பினும் சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் ஆத்தூர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க வரவில்லை. 



மேலும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் அனைவரும் மலர் கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்து வரவேற்றபோது, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு எடப்பாடி பழனிசாமி, தேசிய தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இதனிடையே சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் வருகை தரும்போது வழக்கமான வரவேற்புதான் அளித்துள்ளோம். மேலும் ஒற்றை தலைமை குறித்த கேள்விக்கு, அதிமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் எனவும் கூறியுள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண