பாமகவின் சின்னம், கொடி எனக்கே சொந்தம்.! வேறு வழியில்லாமல் நீதிமன்றம் படியேறிய ராமதாஸ்
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமக பெயர், கட்சி, சின்னம், கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க கோரி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாமகவில் தொடரும் மோதல்
தமிழக அரசியல் களத்தில் திமுக- அதிமுகவிற்கு டப் கொடுக்கும் வகையில் அடுத்த இடத்தில் இருந்த கட்சி பாமக, வட மாவட்டங்களில் அதிகளவு வாக்குகளை கொண்ட கட்சியாக பாமக இருந்து வந்தது. வட மாவட்டங்களில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் பாமகவின் துணை இல்லாமல் ஜெயிக்க முடியாது. ஆனால் தற்போது பாமகவின் நிலையானது கேள்வியை எழுப்பியுள்ளது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக பாமக எடுத்த முடிவால் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் பாமக தோல்வி அடைந்தது.
அன்புமணி- ராமதாஸ் மோதல்
இதனையடுத்து பாமகவில் உட்கட்சி மோதல் தலை தூக்க தொடங்கியது. கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் இளைஞர் அணி தலைவராக தனது பேரன் முகுந்தனை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், இதற்கு மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி, இதனையடுத்து இரு தரப்பும் மோதிக்கொண்ட நிலையில், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் அடுத்தடுத்து நீக்கினர். இதனால் தனித்தனி பிரிவாக பாமக நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
அதிமுகவுடன் கூட்டணி- அன்புமணி
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அன்புமணி தலைமையிலான பாமகவை தங்கள் அணியில் இணைத்துள்ளது அதிமுக, பாமகவிற்கான தொகுதி பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமதாஸ், பாமக பெயரில் கூட்டணி அமைத்தது செல்லாது எனவும், இது சட்ட விரோதம் என கூறியிருந்தார். இந்த நிலையில் அன்புமணிக்கு மீண்டும் செக் வைக்கும் வகையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார் ராமதாஸ்.
சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் தொடர்ப்பட்ட வழக்கில், பாமக எங்களுக்கே சொந்தம், பாமக பெயரில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கூட்டணி ஒப்பந்தம் செல்லாது. கூட்டணி தொடர்பாக அறிக்கை வெளியிட ராமதாசுக்கு மட்டுமே அதிகாரம் என உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ராமதாஸ்
இதே போல மற்றொரு ரிட் மனுவில், பாமக பெயர், கொடி, சின்னம் என அனைத்தும் பாமக நிறுவனர் ராமதாசுக்கே சொந்தம் என கூறியுள்ளார். பாமகவிற்கு அதிகாரப்பூர்வமாக தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அன்புமணி தரப்பு கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த கூடாது கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதமே அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்ட நிலையில் விரைவில் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















