முன்னாள் மத்திய நிதியமைச்சராக பொறுப்பு வகித்தவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமானவர் ப.சிதம்பரம். மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த அவரின் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. தமிழ்நாட்டிலும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது.


இதையடுத்து, தி.மு.க. 4 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதில், தி.மு.க. தங்களது நான்கு இடங்களில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 1 இடத்தை ஒதுக்குவதாக அறிவித்தது. இதனால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ப.சிதம்பரம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சித் தலைமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ப.சிதம்பரம்தான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.




இந்த நிலையில், காங்கிரசின் வேட்பாளர் ப.சிதம்பரம் என்று விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்காக, ப.சிதம்பரம் வேட்புமனுவை தயார் செய்து வைத்துள்ளார். காங்கிரசின் ஒரு ராஜ்யசபா எம்.பி, பதவிக்காக ப.சிதம்பரத்துடன் கே.எஸ்.அழகிரி, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் போட்டியிட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும் கட்சியின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் ப.சிதம்பரத்திற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


டெல்லியில் காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலை அடுத்து நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்த ப.சிதம்பரம், சென்னையில் உள்ள தனது வீட்டில் 10 எம்.எல்.ஏக்களின் கையெழுத்தோடு வேட்புமனுவை தயார் செய்துள்ளார். காங்கிரஸ் தலைமை அதிகாராப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிறகு, வரும் திங்கள்கிழமை அல்லது வரும் வாரத்தில் தலைமைச் செயலகம் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய ப.சிதம்பரம் திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.




தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட   தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார் மற்றும் கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் சி.வி. சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ள சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது விசா முறைகேடு வழக்கு நடைபெற்று வருவதும், அவர் தற்போது டெல்லியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலங்களுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வரும் ஜூன் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வரும் மே 31-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண