Rahul Gandhi: ”சரி வாங்க பேசுவோம்” - தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்கள் - அலறவிட்ட ராகுல் காந்தி - வீடியோ வைரல்
Rahul Gandhi Parliament: நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தியை கண்டதும் உடனடியாக வெளியேறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Rahul Gandhi Parliament: இணைந்து செய்தியாளர்களுக்கு பதிலளிக்கலாம் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை மத்திய அமைச்சர்கள் நிராகரித்தனர்.
ராகுல் காந்தி எண்ட்ரி..
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ராகுல் காந்தி தானும் இணைந்துகொள்கிறேன் என செய்தியாளர்களிடம் வர, உடனடியாக மத்திய அமைச்சர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மேலும், “அட வாங்க.. சேர்ந்தே செய்தியாளர்களை சந்திக்கலாம்” என கூறி ஒரு அமைச்சரின் கையை பிடித்து ராகுல் காந்தி இழுக்க, உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ராகுல் Vs மத்திய அமைச்சர்கள்:
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார். இதுதொடர்பாக அவையில் பதிலளிக்காத நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி மற்றும் அஷ்விணி வைஸ்ணவ் ஆகியோர், எதிர்க்கட்சி தலைவர் உண்மையான ஆதாரங்களை கொண்டு பேச வேண்டுமென விளக்கமளித்து வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ராகுல் காந்தி, எதிர்பாராத விதமாக செய்தியாளர் சந்திப்புக்குள் நுழைந்தார்.
“அட.. சேர்ந்து பேசலாம் வாங்க”
வீடியோவில், “அமைச்சர்களின் அருகே வந்த ராகுல் காந்தி சரி வாருங்கள் சேர்ந்து செய்தியாளர்களை சந்திக்கலாம் என அழைக்கிறார். இதனை கண்டதும் அமைச்சர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட, பிரஹலாத் ஜோசியின் கையை பிடித்து ராகுல் காந்தி உள்ளே அழைத்தார். ஆனால், அமைச்சர் ராகுல் காந்தியின் கையை உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனை கண்டு பின்புறம் நின்றுகொண்டிருந்த பிரியங்கா காந்தி சிரிப்பது” தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பகிர்ந்து வரும் காங்கிரஸ் கட்சியினர், நாடாளுமன்றத்தில் தான் பதில் சொல்ல முடியவில்லை, செய்தியாளர் சந்திப்பிலாவது சொல்லி இருக்கலாமே என கிண்டலடித்து வருகின்றனர்.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அமைச்சர்கள் சென்ற பிறகு தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ஆதாரங்கள் இன்றி நான் எதையும் பேசவில்லை. ஹர்தீப் சிங் பூரி மற்றும் அனில் அம்பானியின் பெயர்கள் எப்ஸ்டீன் ஃபைல்ஸில் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடியின் மீது நேரடியாக அழுத்தம் உள்ளது. அழுத்தம் ஏதும் இல்லாமல், அமெரிக்க உடன் இப்படி ஒரு ஒப்பந்த்தத்தை மேற்கொண்டு இருக்க முடியாது. இயல்பான நிலையில் எந்தவொரு பிரதமரும் இப்படி ஒரு முடிவை எடுக்கமாட்டார்” என ராகுல் காந்தி பதிலளித்தார்.
























