இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம்  உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடந்தது. 


முதற்கட்ட வாக்குப்பதிவு:


நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 62.37 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர், நக்சல் தாக்கம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்று முடிந்தது. 


கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற இந்தியா கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 


ராகுல் காந்திக்கு உடல்நிலை சரியில்லையா?


அதன் தொடர்ச்சியாக மத்திய பிரதேசம் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதில் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. 


ஆனால் தற்போது இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், “ராகுல் காந்திக்கு உடல்நலம் சரியில்லாததால் டெல்லியை விட்டு வெளியேற அவரால் இயலவில்லை.


 






மத்திய பிரதேசம் சாட்னாவை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்வார்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து தமிழ்நாடு, உத்தர பிரதேசம், கேரளா, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இப்படிப்பட்ட சூழலில், ராகுல் காந்தி உடல்நிலை சரியில்லாமல் போனது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.