Anbumani: வன்னியர் எதிரி ஸ்டாலின்.. ஒரு ஓட்டுக்கூட திமுகவிற்கு விழக்கூடாது - அன்புமணி ராமதாஸ் ஆக்ரோஷம்
மு.க.ஸ்டாலின் வன்னியர்களின் எதிரி என்றும், வரும் தேர்தலில் திமுக-விற்கு ஒரு ஓட்டுக்கூட விழக்கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.

வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டை செயல்படுத்தாததை கண்டித்து விழுப்புரத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,
சமூகநீதி விரோதிகள்:
ஒரு நல்ல அரசு, நேர்மையான அரசு, சமூகநீதி அக்கறையுள்ள அரசாக இருந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த அடுத்த மாதத்தில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்திருப்பார்கள். இந்த மக்கள் கஷ்டபட்டுகிட்டு இருக்காங்களே, இந்த புள்ளைங்க படிச்சு முன்னுக்கு வரனும்ங்குற எண்ணம் ஸ்டாலினுக்கு இல்லை. ஸ்டாலினுக்கும், சமூகநீதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திமுகவிற்கும், சமூகநீதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திமுகவும், ஸ்டாலினும் சமூகநீதியின் விரோதிகள்.

இந்த தேர்தலில் நாம் யாரென்று காண்பிக்க வேண்டும். அந்த கோபம் எனக்கு இருக்கிறது. உங்களுக்கு இருக்கிறதா? என் தம்பிகள் நீங்கள் புரிந்து கொண்டால் போதும். எல்லாமே இருக்கிறது. சட்டம், தரவுகள் நம் பக்கம் இருக்கிறது. ஆனால், மனது ஸ்டாலினுக்கு கிடையாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு கீழ் நீதிமன்றம் தடை செய்ய முடியாது.
பொய் சொன்ன ஸ்டாலின்:
எத்தனை முறை நானும், ஐயாவும் பார்த்தோம். நிச்சயமாக நான் செய்கிறேன் என்று பொய்யைச் சொன்னார். இந்த தேர்தலில் பார்க்கத்தான் போகிறோம். நாங்கள் புள்ளைக்கு படிப்பும், வேலையும் கேட்டோம். அது உன் கடமைதானே? அதற்கு கணக்கெடுப்பு நடத்தனும். சட்டத்தில் இடமில்லை என்று யாரை ஏமாற்றுகிறீர்கள். உங்களுக்கு அதிகாரம் இல்லையா?

ஆந்திராவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் 2வது முறையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பீகாரில் நடத்தி முடிச்சுட்டாங்க. ஸ்டாலினுக்கு மட்டும் அதிகாரம் இல்லையா? இந்திய புள்ளிவிவர சட்டத்தின்படி, பஞ்சாயத்து தலைவருக்கு அவரது பஞ்சாயத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உண்டு. உங்களுக்கு கிடையாதா? எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
வன்னியர் எதிரி திமுக, ஸ்டாலின்:
இது நம்புற மாதிரி இருக்குதா? நம்புவீங்களா? இந்த செய்தியை எல்லா கிராமத்திற்கும் எடுத்துகிட்டு போங்க. இந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற பிடிவாதம், பிடிவாதம் அல்ல ஆணவம், முன்னேறக்கூடாது, ஓட்டு மட்டும்தான் போடனும்னு அப்படிங்குற ஆணவம். நிச்சயம் வரும் காலம் வன்னியர்களுக்கு எதிரானது திமுக, வன்னியர் எதிரி திமுக ஸ்டாலின். ஒரு ஓட்டுக்கூட திமுகவிற்கு போகக்கடாது. அப்படி செஞ்சே ஆகனும். நாம படிக்கக்கூடாது, வேலைக்கு போகக்கூடாது என்ற ஆணவத்தில் இருக்கும் திமுகவிற்கும், ஸ்டாலினுக்கும் நாம் மிகப்பெரிய பாடத்தை புகட்டுவோம். அதுக்கு தயார் ஆகுங்கள்.

காந்தி 32 ஆண்டுகளில் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது. ஐயா 45 ஆண்டுகள் போராடியும் நமக்கு விடுதலை கிடைக்கவில்லை. 45 ஆண்டுகள் ஐயா இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். நம்மை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினுக்கு உண்டு. திமுகவில் 23 பேர் வன்னிய சட்டமன்ற உறுப்பினர்கள். 5 பேர் மக்களவை உறுப்பினர்கள். இவர்களுக்கு எந்த உணர்வாது இருக்கிறதா? இவர்களுக்குள் என்ன ரத்தம் ஓடுகிறது?
இவ்வாறு அவர் பேசினார்.






















