சசிகலா-டிடிவி தினகரனை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறி, தேனி மாவட்ட அதிமுகவினர் நேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-யை சந்தித்து முறையிட்டதிலிருந்து, பற்றி எரிகிறது அரசியல் களம். ஓபிஎஸ்-யின் நிழலாக உள்ள தேனி மாவட்ட நிர்வாகிகள், எப்படி இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை ஓபிஎஸ்-யிடம் கொண்டு சேர்த்தார்கள், என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஓபிஎஸ் விருப்பம் இல்லாமல் இந்த முயற்சி சாத்தியமில்லை என்கிற கேள்வியும் உடனே பயணித்தது. இந்நிலையில் தான், ஓபிஎஸ் குடும்பத்திற்கும் சசிகலா குடும்பத்திற்கும் ஆரம்பம் முதல் பாலமாக இருந்து வரும், ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜாவிடம் ஏபிபி நாடு சார்பில் பேசினோம்.... இதோ அந்த பிரத்யேக பேட்டி...




கேள்வி: தேனி மாவட்ட தொண்டர்களின் ஒப்புதலோடு தான் சசிகலா இணைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா கூறப்படுகிறது. நீங்களும் உடன் படுகிறீர்களா?


ஓ.ராஜா: நான் தானே அதை ஆரம்பித்து வைத்தேன். அதற்கான ஏற்பாடுகளை செய்ததே நான் தானே. தீர்மானம் போடச் சொன்னதும் நான் தான். அதற்கான ஏற்பாடுகளையும் நான் தான் முன்நின்று செய்தேன். 


கேள்வி: திடீர் என இந்த முடிவு எடுக்க காரணம் என்ன? 


ஓ.ராஜா: திடீர் முடிவு எல்லாம் கிடையாது. தொண்டர்கள் விருப்பப்படுகிறார்கள். தொண்டர்கள் முடிவுக்கு தான் நாம போக வேண்டும். நாமாக முடிவு செய்ய முடியாது. சசிகலா-டிடிவி இணைப்பை தொண்டர்கள் முழுமையாக விரும்புகிறார்கள். 


கேள்வி: சசிகலா அல்லது டிடிவி வந்தால்... ஓபிஎஸ் தலைமை பறிபோகலாமே?


ஓ.ராஜா: ஏன் பறிபோகணும்?  இதற்கு முன் அவர்கள் தலைமையின் கீழ் தானே இருந்தோம். அப்போது எல்லாமே நன்றாக தானே இருந்தது. அவரது தலைமையை ஏற்பதில் அண்ணனுக்கு தயக்கம் இல்லை.


கேள்வி: அப்போ... சசிகலா தலைமை தான் அதிமுகவுக்கு சரியா இருக்கும்னு நினைக்கிறீங்களா?


ஓ.ராஜா: சசிகலா தலைமை எடுத்தால் என்றில்லை... அவர் தலைமை எடுத்தால் தான் அதிமுக நன்றாக இருக்கும். சசிகலா வந்தாலே கட்சி சரியாகிவிடும். 


கேள்வி: சசிகலா வந்தால் போதுமா?  டிடிவியும் வர வேண்டுமா?


ஓ.ராஜா: சசிகலாவும் வர வேண்டும், டிடிவியும் வர வேண்டும். டிடிவி தானே ஒரு காலைத்தில் கட்சிக்கு தலைமை தாங்கினார். 2001-2006 வரை அவர் தானே தலைமையில் இருந்தார். அதனால் அவர்கள் இருவரும் வர வேண்டும். 


கேள்வி: சசிகலா-டிடிவி இடையே நல்ல உடன்பாடு இல்லை என்கிறார்களே?


ஓ.ராஜா: அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதற்குள் என்னால் போகவும் முடியாது. எல்லோரும் ஒன்று சேர்ந்து நல்லபடியா இருக்கணும், எங்களுக்கு அது தான் வேணும்.


கேள்வி: இது தேனியோட விருப்பமா? இல்லை அதை தாண்டி....


ஓ.ராஜா: எங்களை மாதிரியே மற்ற மாவட்டங்களும் இந்த தீர்மானத்தை போடுவாங்க. நானே பல மாவட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறேன். சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் பேசியிருக்கிறேன். அனைவரும் தயாராக உள்ளனர். 


கேள்வி: இந்த கோரிக்கையை ஓபிஎஸ் ஏற்பாரா?


ஓ.ராஜா: தொண்டர்கள் சொல்வதை தான் அவர் செய்வார். அவர் தொண்டர்களின் குரலுக்கு மதிப்பு தருவார். 


கேள்வி: ஓபிஎஸ் ஓகே சொன்னாலும்.... இபிஎஸ் ஓப்புக் கொள்ள வேண்டுமே?


ஓ.ராஜா: இபிஎஸ் தலையிட்டாலும் சரி, தலையிடாவிட்டாலும் சரி,  தொண்டர்கள் ஏற்பாடு செய்துவிட்டோம். இது தொண்டர்களின் விருப்பம்.


கேள்வி: அப்போது சசிகலா சேர்ந்துவிடுவார் என்கிறீர்களா?


சமரசம் இல்லை.... சின்னம்மாவை வரவேற்க தயாராகிவிட்டோம். அவரது தென்மாவட்ட சுற்றுப்பயணத்தில் தேனிக்கு வரும் போது, நானே பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பேன். நான் மட்டுமல்ல, தொண்டர்கள் அனைவரும் அளிப்பார்கள். , என்றார். 


ஓபிஎஸ் சொந்த தம்பியே சசிகலா-டிடிவி இணைப்புக்கு முழு முயற்சி எடுத்து வருவதும், அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதும், அதிமுகவில் அடுத்த சில நாட்களுக்கு பேசும் பொருளாக இருக்கும்.