EPS vs SPV: காலியாகும் இபிஎஸ் கூடாரம்.! எஸ்பி வேலுமணியிடம் தாவிய 30 எம்எல்ஏக்கள்- அதிமுகவில் திடீர் திருப்பம்
EPS vs SPV: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில், உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து இபிஎஸ்க்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் அதிமுக தோல்வி
தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிவடைந்துள்ள நிலையில், தவெக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த திமுக ஆட்சியில் எதிர்கட்சியாக தொடர்ந்து வந்த அதிமுக, 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அதிமுகவிற்குள் மோதல் உருவாகியுள்ளது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை தான் தோல்விக்கு காரணம் என அதிமுக மூத்த நிர்வாகிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தேர்தல் முடிவு வந்த அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினார்.
போட்டி போட்டு இபிஎஸ்- சி.வி.சண்முகம் ஆலோசனை
தினந்தோறும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அதிமுகவின் தேர்தல் தோல்விக்க எடப்பாடி பழனிசாமி தான் காரணம் எனவும், சரியான முறையில் கூட்டணி அமைக்காதது உள்ளிட்ட காரணங்களை பட்டியலிட்டு இபிஎஸ்கு எதிராக சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார். இதனையடுத்து இரண்டு பக்கத்திலும் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், திமுக சட்டமன்ற கட்சி தலைவராக உதயநிதியும், காங்கிரஸ் கட்சி தலைவராக ராஜேஷ், பாமக சட்டமன்ற கட்சி தலைவராக சவுமியா அன்புமணியும், விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற கட்சி தலைவராக வன்னி அரசும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்கட்சியாக இருந்த அதிமுகவில் பல முறை கூட்டம் நடைபெற்றும் இன்னும் சட்டமன்ற கட்சி தலைவர் நியமிக்கப்படவில்லை.
அதிமுகவில் உட்கட்சி பூசல்
இந்த நிலையில் இன்று காலை சட்டமன்றத்திற்குள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் போது, ஒரு தரப்பு எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணியுடன் ஒரு தரப்பு எம்எல்ஏக்களும் தனித்தனியாக வந்தனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி எடுக்க சென்றபோது ஒரு சிலர் மட்டுமே மேஜையை தட்டினார்கள். இதனால் அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவிவரும் நிலையில் சட்டப்பேரவையிலும் அது எதிரொலித்தது.
எஸ்பி வேலுமணிக்கு 30 எம்எல்ஏ ஆதரவு
இந்த நிலையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர் சட்டமன்ற கட்சி தலைவராக நியமிக்க கையெழுத்திட்டு மனு கொடுத்தனர். அதே நேரம் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் அதிமுக இரண்டாக உடையும் நிலை உருவாகியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















