2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
"234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர்" என திருவிடந்தை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பேசினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற "என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி" - சென்னை மற்றும் விழுப்புரம் மண்டல திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி மாநாட்டில் திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களையும், இலக்குகளையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
எனர்ஜி பூஸ்ட் தரும் உடன்பிறப்புகள்
மாநாட்டில் திரண்டிருந்த நிர்வாகிகளின் உற்சாகத்தைக் கண்டு நெகிழ்ந்த முதல்வர், "உங்களின் நம்பிக்கையைப் பார்க்கும்போது எனக்கு எனர்ஜி பூஸ்ட் கிடைத்தது போல இருக்கிறது" எனத் தொடங்கினார். சென்னை மற்றும் வட தமிழகம் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், 49 தொகுதிகளின் வெற்றியை உறுதி செய்ய இப்போதே களப்பணியைத் தொடங்க உத்தரவிட்டார். தேர்தல் காலத்தில் திமுக உடன்பிறப்புகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க யாராலும் முடியாது என்பதை எதிரிகளே ஒத்துக்கொள்வார்கள் எனப் பெருமிதம் தெரிவித்தார்.
பூத் கமிட்டி இலக்கு: 2.5 கோடி வாக்குகள்
திமுகவின் வலுவான உட்கட்டமைப்பை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் உள்ள 75,000 வாக்குச்சாவடிகளிலும் தலா 10 பேர் கொண்ட குழுக்கள் இருப்பதை நினைவுபடுத்தினார். "ஒவ்வொரு பூத்திலும் குறைந்தபட்சம் 350 வாக்குகளைப் பெறுவதே நமது இலக்கு. இதைச் சரியாகச் செய்தால் 2 கோடியே 60 லட்சம் வாக்குகளைப் பெற முடியும். ஏற்கனவே 1 கோடியே 14 லட்சம் குடும்பங்கள் நம்முடன் இருக்கின்றன. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் 40 முதல் 50 வாக்குகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டால் வெற்றி நிச்சயம்" என்று கணக்கீடுகளுடன் விளக்கினார்.
"திராவிட மாடல் 2.0" – அடுத்த 50 ஆண்டுகால புளூ பிரிண்ட்
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்திற்குச் சென்ற தமிழக வளர்ச்சியை, தற்போது 11.19 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார். "கல்விப் புரட்சி, சிறுபான்மையினர் நலன், விவசாயத்திற்கான தனி பட்ஜெட் என நாம் செய்துள்ள சாதனைகள் அடுத்த 50 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட். சொல்லாத திட்டங்களையும் செய்து காட்டும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. அடுத்த அமையவிருக்கும் 'திராவிட மாடல் 2.0' அரசு தமிழகத்தை உலக நாடுகளுக்கு இணையான வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும்" என உறுதி அளித்தார்.
வீடு வீடாகச் செல்லுங்கள்: சாதனைகளைச் சொல்லும் 'குட்டி புத்தகம்'
நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த முதல்வர், "நமது சாதனைகள் குறித்த குட்டிப் புத்தகத்தை ஒரு மணிநேரம் செலவழித்துப் படியுங்கள். பரப்புரைக்குச் செல்லும்போது அதை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். திமுகவிற்கு வாக்களிக்கும் குடும்பம், வாக்களிக்காத குடும்பம் எனப் பாராமல், தேர்தலுக்கு முன்பாக ஐந்து முறை வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும். மகளிர் அணியினரும் வீடு வீடாகச் சென்று சாதனைகளை விளக்க வேண்டும்" என்றார். தற்போது தமிழகத்தில் ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை, மாறாக ஆதரவான மனநிலையே நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு VS NDA
இந்தத் தேர்தல் வெறும் இரு கூட்டணிகளுக்கு இடையிலான போட்டி அல்ல, இது "தமிழ்நாடு VS NDA" இடையிலான போர் என்று முதல்வர் முழங்கினார். "அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது டெல்லி பாஜகவின் ஆட்சியாகவே இருக்கும். தமிழகத்தின் தொகுதி எண்ணிக்கை குறைக்கப்படும், நமது வளர்ச்சி பின்னோக்கிச் செல்லும், அமைதி குலைந்து கலவர அரசியல் தலைதூக்கும். பாஜகவின் 'டப்பா இன்ஜினுக்கு' முன்னால் தமிழகத்தின் 'சூப்பர் பாஸ்ட் இன்ஜின்' ஒருபோதும் தலைகுனியாது" எனத் தெரிவித்தார்.
ஒற்றுமையே பலம்: வேட்பாளர் யார்?
கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து நிர்வாகிகள் கவலைப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், "234 தொகுதிகளிலும் இந்த ஸ்டாலின் தான் வேட்பாளர் என்று நினைத்து வேலை பாருங்கள்.i ஒற்றுமையாகப் பணியாற்றினால் 234 இடங்களிலும் முழு வெற்றி நமதே. நான் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறேன், நீங்களும் அதே உறுதியுடன் பணியாற்றுங்கள். திமுக மீண்டும் வெல்லும், மீண்டும் மீண்டும் வெல்லும்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.























