சென்னை, தாம்பரம் சண்முகம் சாலையில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தாம்பரத்தை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையையொட்டி, தாம்பரம் பகுதி முழுவதும் தற்போது போலீசார் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது

 

மேடையில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், தன்னால் தமிழில் பேச முடியவில்லை என வருத்தப்படுவதாகவும் முதலில் ஆங்கிலத்தில் பேசுவதாகவும் அதன் பிறகு தனது தாய் மொழி இந்தியில் பேசுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் ராஜ ராஜ சோழன், சேரர்கள் கடற்படையில் திறமையாக விளங்கினர். நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழ் மொழி தான் தாய். நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது தமிழுக்கு செய்த பெருமை, தமிழ்நாட்டில் மட்டுமே அறிந்திருந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதிலிருந்து புதிய வரலாறு, தமிழக பெருமைக்காக எழுதப்பட்டுள்ளது.

 

சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியா எந்த வேகத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமோ, அந்த வேகத்தில் முன்னேற்றம் அடையவில்லை. மிகவும் மந்தமாக 75 ஆண்டுகள் வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து உலக நாடுகள் மத்தியில், இந்தியாவிற்கு மிகப்பெரிய உயரமோ மதிப்போ கிடைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு இந்தியா என்ன சொல்லப் போகிறது என உலக நாடுகள் அத்தனையும் காத்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்து வருகிறார். தமிழகத்தில் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஊழல் இல்லாத ஆட்சி கொடுப்போம். 








 

உலக நாடுகள் மத்தியில், இந்தியாவின் குரலுக்கு மதிப்பு மரியாதையும் பெருகி வருகிறது. இந்தியா என்ன முடிவெடுக்க போகிறது. இந்தியா எந்த இலக்கை நோக்கி நகரப் போகிறது என்று எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தில் இந்தியா முதல் ஐந்து இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பிற நாடுகளை விட முன்னேறி கொண்டு வருகிறது. இந்தியாவில் தனிநபர் வருமானம் மிக அதிகமாக வளர்ந்து கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.