மயிலாடுதுறை: "ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) நீண்ட கால நிலைப்பாடு தற்போது சாத்தியமாகி, நிறைவேறியுள்ளது" என்று அக்கட்சியின் மாநில பொருளாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், விசிக குறித்து சமூக வலைதளங்களில் கீழ்த்தரமான கருத்துக்களைப் பரப்பும் திமுக முன்னணி தலைவர்களை அக்கட்சியின் தலைமை கண்டிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி வருகை தந்திருந்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அரசியல் சூழல், திமுக கூட்டணி விவகாரம் மற்றும் தவெக கட்சியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய விசிக!

செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.எஸ்.பாலாஜி பேசியதாவது: "ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திடீரென இப்போதோ அல்லது தேர்தல் நெருங்கும் நேரத்திலோ எடுத்த முடிவு அல்ல. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போதே, மக்கள் நலக் கூட்டணி என்ற பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்கி, இந்த முற்போக்கான கருத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழக அரசியல் களத்தில் மிக அழுத்தமாக முன்னெடுத்தது.

Continues below advertisement

அக்காலகட்டத்தில், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே, 'ஆட்சி அதிகாரம் என்பது ஒரு தனிப் பெரும்பான்மை கட்சிக்கு மட்டுமே உரியது; அதில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கு அளிப்பது சாத்தியமற்ற ஒன்று' என்று கூறி விசிக-வின் இந்த நிலைப்பாட்டை நிராகரித்தன. ஆனால், காலம் மாறியுள்ளது. அன்று அவர்களால் சாத்தியமற்றது என்று மறுக்கப்பட்ட ஒரு அரசியல் கோட்பாடு, இன்று சாத்தியமான ஒன்றாக, தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இது விசிக-வின் கொள்கை உறுதிக்குக் கிடைத்த வெற்றியாகும்."

திமுக தலைவர்களின் கருத்துக்குக் கண்டனம்!

தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணி குறித்தும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களின் அண்மைக்கால விமர்சனங்கள் குறித்தும் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

"நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி சில இடங்களில் பின்னடைவைச் சந்தித்ததற்கு, அக்கட்சியின் தற்போதைய முன்னணி தலைவர்கள் மற்றும் சில நிர்வாகிகளின் செயல்பாடுகளே முக்கியக் காரணம் என்று திமுகவைச் சேர்ந்தவர்களே தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். உண்மை நிலை இவ்வாறு இருக்க, தங்களது தவறுகளை மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது சிலர் தேவையற்ற விமர்சனங்களை வைக்கின்றனர்.

குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆட்சியில் பங்கு பெறும் என்ற தற்போதைய அரசியல் சூழலில், திமுகவைச் சேர்ந்த சில முன்னணி தலைவர்கள் விசிக குறித்தும், அதன் கொள்கைகள் குறித்தும் மிகவும் கீழ்த்தரமான கருத்துக்களை சமூக வலைதளங்களிலும், பொதுவெளிகளிலும் தெரிவித்து வருகின்றனர். இது ஒரு ஆரோக்கியமான கூட்டணிக் தர்மத்திற்கு அழகல்ல."

ஆ.ராசாவுக்கு விசிக கண்டனம்!

மேலும், திமுகவின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசாவின் பேச்சு குறித்து எஸ்.எஸ்.பாலாஜி குறிப்பிடுகையில்: "திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அதன் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அண்மையில் தெரிவித்துள்ள கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் தலைவர், கூட்டணிக் கட்சியைப் பற்றி இவ்வாறு பேசுவது ஏற்புடையதல்ல. தங்களது சுயவிளம்பரத்திற்காகவோ அல்லது உள்நோக்கத்துடனோ பேசப்படும் இதுபோன்ற நச்சுப் பேச்சுக்களை திமுக தலைமை வேடிக்கை பார்க்கக் கூடாது. உடனடியாக திமுக தலைமை தலையிட்டு, ஆ.ராசா உள்ளிட்ட முன்னணி தலைவர்களின் இத்தகைய அவதூறு பேச்சுகளைக் கண்டிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்" என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரவேற்பு!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அண்மைக்கால அறிவிப்புகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எஸ்.எஸ்.பாலாஜி,

"தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், தன்னிச்சையாக அரசு அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகளை சங்கடப்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, தவெகவினர் யாரும் தன்னிச்சையாக அரசு அலுவலகங்களில் நுழைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது கட்சி நிர்வாகிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாங்கள் வரவேற்கிறோம்.

பொதுமக்களாகவோ அல்லது அரசியல் கட்சியினராகவோ அரசு அலுவலகங்களுக்குச் சென்று, மக்களுக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வைப்பது, நமது தேவைகளைக் கேட்பது என்பது ஜனநாயக உரிமை. அது முற்றிலும் வேறு விஷயம். ஆனால், ஒரு அரசியல் கட்சித் தொண்டரோ அல்லது நிர்வாகியோ, தங்களுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லாத நிலையில் அரசு அலுவலகங்களுக்குள் சென்று நேரடியாக 'ஆய்வு செய்கிறோம்' என்று கூறுவது சட்டப்படி தவறு, அது நிர்வாக நடைமுறைகளை பாதிக்கும். இதனை உணர்ந்து, தவெக தலைமை தனது நிர்வாகிகளுக்குச் சரியான முறையில் அறிவுறுத்தியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முதிர்ச்சியான அணுகுமுறையாகும்" என்று தெரிவித்தார். மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.