மயிலாடுதுறை: முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்த ஏ.ஜி. பேரறிவாளன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளதற்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இந்திய இறையாண்மைக்கு சவக்குழி தோண்டும் முயற்சி என்றும், நீதித்துறையின் மாண்பைக் குலைக்கும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.

Continues below advertisement

இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

வரலாற்றுத் துரோகம்

"பாரத ரத்னா" விருது பெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை, உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ (LTTE) தீவிரவாத அமைப்பின் மூலம் சதித் திட்டம் தீட்டி படுகொலை செய்த வழக்கில் ஏ.ஜி. பேரறிவாளன் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை தண்டனை அனுபவித்த அவர், 2022-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது என்பது அவர் நிரபராதி என்பதற்காக அல்ல; மாறாக, அவரது கருணை மனு மீது முடிவெடுக்க மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவிய காலதாமதத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது.

Continues below advertisement

அத்தகைய நபர், இன்று சட்டத்தைக் காக்கும் வழக்கறிஞர் பணியில் தன்னை இணைத்துக் கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத முரண். நாட்டின் பிரதமரையும், அவருடன் இணைந்து 16 அப்பாவி உயிர்களையும் காவு வாங்கிய ஒருவருக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவது என்பது இந்திய நீதி வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகும்.

அதிகாரப் பரவலாக்கின் நாயகன் படுகொலை

இந்தியாவை வல்லரசுப் பாதையில் நடைபோடச் செய்த தொழில்நுட்ப நாயகன் ராஜீவ் காந்தி. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் 15 லட்சம் உள்ளாட்சிப் பதவிகளை உருவாக்கி, அதிகாரத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அவர். அத்தகைய பெரும் தலைவரைப் படுகொலை செய்த சதியில் பங்கெடுத்த ஒருவரை, "வழக்கறிஞர்" என்று அழைப்பது அந்தப் புனிதமான தொழிலுக்கே இழுக்காகும்.

வ.உ.சிதம்பரனார் போன்ற தேசபக்த வழக்கறிஞர்கள் வாழ்ந்த இந்தப் பெருமைமிக்க வழக்கறிஞர் சமூகத்தில், நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைத்தவர் அங்கீகரிக்கப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்? படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்றும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் நீதிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு இத்தகைய வாய்ப்பு வழங்கப்படுவது நீதி தேவதையின் கண்களில் துகள்களைத் தூவும் செயலாகும்.

எதிர்காலத் தலைமுறைக்குத் தவறான முன்னுதாரணம்

இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத் தலைமுறையினரிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றாலும், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பித்துவிடலாம் என்கிற எண்ணம் மேலோங்கினால், அது நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இது களையப்பட வேண்டிய அடிவேர்.

நிர்வாகங்களுக்குக் கோரிக்கை மனு

பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவைத் திரும்பப் பெறக் கோரி, இந்திய இறையாண்மையைக் காக்கும் பொருட்டு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா அவர்கள் பல்வேறு தரப்பினருக்குக் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளார்.

* இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர்

* இந்திய உள்துறை அமைச்சகம்

* மத்திய மற்றும் மாநில சட்ட அமைச்சர்கள்

* இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில்

* தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலகம்

நீதிக்கானப் போராட்டம்

"இந்தக் கருப்பு தினத்தை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. நீதித்துறைக்கு ஏற்படும் இந்தக் களங்கத்தை எதிர்த்து நாம் ஒன்றிணைய வேண்டும். படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். பயங்கரவாதத்திற்குத் துணை நின்றவர்களுக்குச் சட்ட அங்கீகாரம் கிடைப்பதை எதிர்த்துத் தொடர்ந்து போராடுவோம்," என்று சுதா எம்.பி தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.