தேமுதிகவில் இருப்பவர்கள்  கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக, அமைச்சரவையிலும் இடம் பெறுவார்கள் - தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் - மதுரையில் நடைபெற்ற தே.மு.தி.க பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு.

 

கேப்டன் - முதல் மாநாடு உலகிலேயே நம்பர் ஒன் மாநாடு

 

மதுரை கூடல் நகர் பகுதியில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுது. அப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது...,” தமிழகத்தில் ஆண்ட கட்சிக்கும் ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது தேமுதிக என பெருமையுடன் சொல்கிறேன். தேமுதிகவினர் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். விரைவில் தேர்தல் செய்திகள் வர உள்ளது. SIR பணிகள் தமிழகத்தில் நடைபெற்ற வருகின்றது. தேமுதிகவின் அனைத்து நிர்வாகிகளும் தேமுதிக வாக்குகளை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளவர்கள் SIR முறைகேடு நடப்பதாகவும், ஆண்ட கட்சி முறையாக நடப்பதாகவும் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கேப்டனின் அனைத்து நிகழ்வுகளும் மதுரையில் இருந்து தான் தொடங்கியது. 2005 கேப்டன் தொடங்கிய கட்சியின் முதல் மாநாடு உலகிலேயே நம்பர் ஒன் மாநாடு என பெருமை பெற்றுள்ளது.

 

சட்ட மன்ற உறுப்பினர் - அமைச்சராக வாய்ப்பு

 

தமிழகத்தில் எந்த கட்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது என பார்த்தால் அதில் முதல் இடத்தை தேமுதிகவின் முதல் மாநாடு தான். மதுரையில் நான் செல்லாத இடங்களே இல்லை. அனைத்து தேர்தலிலும் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நான் பணியாற்றி உள்ளேன். 2011 மதுரையில் திருப்பரங்குன்றம், மதுரை மத்திய தொகுதியை வென்றது தேமுதிக. கலைஞர் ஜெயலலிதா இருக்கும்போது மிகப்பெரிய சரித்திரத்தை உருவாக்கிய கட்சி தேமுதிக. கேப்டனின் கனவு லட்சியம் நிறைவேற 2026 சட்டமன்றத் தேர்தலில் நிறைவேறும். நீங்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும். வருகின்ற 2026 சட்டமன்றத்தில் கூட்டணி அமைச்சரவை அமையும். தேமுதிகவில் இருப்பவர்கள்  கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக  அமைச்சரவையிலும் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

 

பிரேமலதா  மதுரையில் போட்டியிட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம்

 

பிரேமலதா என்ற உடன் பிரதமர் என கட்சி நிர்வாகி கூறுகிறார். கடவுள் ஒருவர் தான் இறுதி எஜமானார். அவர் இறுதி கணக்கு போட்டால் யாரும் அதை தடுக்க முடியாது. விஜயகாந்த் முதல்வராகி இருந்தால் கூட ஊழல் குற்றசாட்டுக்களை வைத்திருப்பார்கள். ஆனால் அதுபோல எந்த குற்றச்சாட்டும் எழுந்துவிடக்கூடாது, என்பதற்காகவோ என்னவோ அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து கடைசி வரை மக்கள் மனங்களில் நிரந்தரமாக இருந்துவிட்டார்” என்றார்.

 

மதுரை மத்திய தொகுதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதியில் வருகிற 26 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  மதுரையில் போட்டியிட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது