விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்.. தவெகவில் இனி இவர்தான் எல்லாம்.. யார் இந்த அருண் ராஜ் ஐஆர்எஸ்?
பீகாரில் வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராக பதவி வகித்து வரும் அருண் ராஜ், விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவருக்கு பெரிய பதவி தரப்பட உள்ளதாக பேசப்படுகிறது.

வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராக பதவி வகித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான கே.ஜி. அருண் ராஜ், தன்னுடைய பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விஜய்யின் ஆனஸ்ட்ராஜ்:
தமிழ்நாட்டில் இன்னும் 12 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக, ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதேபோல, திமுகவை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில், பாஜகவை தன்னுடைய கூட்டணியில் இணைத்து பலத்தை பெருக்கியுள்ளது அதிமுக.
இருபெரும் திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் முதல்முறையாக தேர்தல் களத்தில் இறங்குகிறது விஜய்யின் தவெக. இளைஞர்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பதிவு செய்ய தவெக முயற்சி செய்து வருகிறது.
தவெகவில் இனி இவர்தான் எல்லாம்
இருப்பினும், அரசியல் களத்திற்கு வராமல் வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்து வருவதாக விஜய் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இந்த நிலையில், மிக பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது தவெக. தேர்தல் நெருங்கும் சமயத்தில் அக்கட்சியில் முக்கிய நபர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்போது, அது யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் வேறு யாரும் அல்ல தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான கே.ஜி. அருண் ராஜ். பீகாரில் வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராக பதவி வகித்து வரும் இவர், விருப்ப ஓய்வு கோரி இருந்தார். தற்போது, குடியரசு தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், அருண் ராஜ், தவெகவில் விரைவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவ்வளவு நாள்களாக விஜய்-க்கு அரசியல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்ததே இவர்தான் என சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
மருத்துவர் டூ ஐஆர்எஸ்:
தற்போது, விஜய்-க்கு அரசியல் உத்திகளை வகுத்து வரும் ஜான் ஆரோக்கியசாமியை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்ததே அருண் ராஜ் எனக் கூறப்படுகிறது. இவ்வளவு நாள்களாக மத்திய அரசு பணியில் இருந்து வரும் இவர் தற்போது நேரடி அரசியல் களத்திற்கு தயாராகியுள்ளார். தவெகவில் இவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வருமான வரித்துறையின் இணை ஆணையராக பதவி வகித்து வந்த இவரை, 2021 தேர்தல் காலத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு மாற்ற தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் அவர் தமிழ்நாட்டில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மருத்துவரான இவர் பின்னர், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரியாகியுள்ளார்.





















