”பெண்கள் பாதுகாப்பு வெறும் விளம்பரம்” - திமுக மீது நடிகை கஸ்தூரி கடும் தாக்கு...
தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என நடிகை கஸ்தூரி கோவையில் விமான நிலையத்தில் பேட்டி.

நாடாளுமன்றத்தில் கமல் பேசியது புரியாமலயே அவரை சிலர் பாராட்டுகிறார்கள் ஆனால் அவர் பெரியாருக்கான பதிலைதான் கூறுகிறார் என்றும் தெலுங்கு மொழியை இழிவுப்படுத்தியுள்ளார் என நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இரவு நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் சென்றால் தெரியும்
பெண்களுக்கு கிடைக்காத பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் கண்டித்து தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தி.மு.க அரசு தமிழ்நாட்டு மக்களை குடி நோயாளிகளாக மாற்றி விட்டதாகவும், தமிழ்நாடு அரசே மதுவிற்கு அடிமையாகி விட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் நெருங்குவதால் பார் லைசென்ஸ்கள் வழங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் நிதி திரட்டப்படுவதாக நடிகை கஸ்தூரி குற்றம் சாட்டினார். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளதாக கூறி வரும் முதல்வர், இரவு 8 மணிக்கு மேல் அவரை வாக்கிங் சென்றால் பெண்களின் நிலை குறித்து தெரியவரும் என விமர்சனம் செய்தார்.
கமல் பேசுவது புரியாமலேயே பலர் பாராட்டுகிறார்கள் என்றும், அவர் தெலுங்கு மொழியை இழிவுபடுத்தி உரையை தொடங்குவதாகவும் குற்றம்சாட்டினார். சினிமாவையும் அரசியலையும் குழப்பக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். த.வெ.க தலைவர் விஜய் மாநாடுகளுக்கு மாநாடு பேசிவிட்டு, அதன் பின்னர் அமைதியாகிவிடுகிறார் என்றும், எந்த பிரச்சனையிலும் அவர் கருத்து தெரிவிப்பதில்லை என்றும் விமர்சித்தார். புதிய கட்சி என்பதால் விருப்ப மனுக்களை அவரது ரசிகர்கள் வாங்குவார்கள், ஆனால் மனுத் தாக்கல் செய்ய மாட்டார்கள், மனுத் தாக்கல் செய்பவர்கள் போட்டியிட மாட்டார்கள், போட்டியிடுபவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்றும் கஸ்தூரி தெரிவித்தார்.






















