பாலாற்றில் ரூ.52 கோடியில் புதிய உயர்மட்ட மேம்பாலம்: 20 கிராம மக்களின் நீண்டகால கனவு நனவாகிறது!
walajabad bridge: "காஞ்சிபுரம் வாலாஜாபாத் பாலாற்றில் குறுக்கே 52.02 கோடி ரூபாய் செலவில், பாலம் அமைப்பதற்கான பணிகள் இன்று துவங்கியது."

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓடும் பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய இரண்டு ஆறுகளும் மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன. பருவமழை காலங்களில் இந்த ஆறுகளில் அதிக அளவில் வெள்ள நீர் செல்வது வழக்கம். இத்தகைய சூழலில், ஆற்றுப் பாதையில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்குவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
தரைப்பாலத்தால் நிலவும் போக்குவரத்து சிக்கல்கள்
காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் - அவளூர் கிராமங்களை இணைக்கும் வகையில் சுமார் 1 கிலோமீட்டர் நீளத்திற்குத் தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தரைப்பாலமானது சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாழ்வாதார பாலமாகத் திகழ்கிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்பவர்கள் வரை அனைவரும் இந்தப் பாலத்தையே நம்பியுள்ளனர்.
வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய முக்கிய நகரங்களுக்குச் செல்ல இந்தப் பாலம் மிக முக்கியப் பாதையாக உள்ளது. ஆனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இந்தத் தரைப்பாலம் நீரில் மூழ்கிப் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால் கிராம மக்கள் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை நிலவி வந்தது.
நீண்ட காலக் கோரிக்கையும் திட்ட அனுமதியும்
கடந்த 2021-ஆம் ஆண்டு பாலாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கின் போது, இந்தத் தரைப்பாலத்தின் ஒரு பகுதி முழுமையாகச் சேதமடைந்தது. அப்போதே அந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், அப்போது தரைப்பாலம் மட்டுமே தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டது. மக்களின் நீண்ட காலத் துயரத்தைப் போக்க நிரந்தர தீர்வாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுத் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 52.02 கோடியில் மேம்பாலப் பணி தொடக்கம்
வாலாஜாபாத் - திருப்பலிவனம் சாலையில் அமைந்துள்ள இந்தத் தரைப்பாலத்திற்கு மாற்றாக, சுமார் 52.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இந்தப் பணிக்கான அடிக்கல்லை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் தி க. சுந்தர் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.
புதிய பாலத்தின் சிறப்பம்சங்கள்
தற்போது அமையவுள்ள இந்தப் புதிய உயர்மட்ட மேம்பாலம் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் அமைய உள்ளது
மொத்த நீளம்: சுமார் 734 மீட்டர்.
கட்டமைப்பு: 17.40 மீட்டர் அளவில் 39 தூண்களும் (Spans/Vents), 10 மீட்டர் அகலத்தில் 6 தூண்களும் அமைய உள்ளன.
பாலத்தின் அகலம்: ஒட்டுமொத்தப் பாலம் 12 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது.
ஓடுதளம்: வாகனங்கள் செல்வதற்கான ஓடுபாதை (Carriageway) 7.50 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்தப் புதிய மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது, பாலாற்றில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் எவ்விதத் தடங்கலும் இன்றி மக்கள் வாலாஜாபாத் மற்றும் இதர நகரங்களுக்குச் செல்ல முடியும். இது சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பல ஆண்டு காலக் கனவை நனவாக்கும் திட்டமாக அமையவுள்ளது.























