தவெகவில் ஆதவ் அர்ஜூனா

தமிழகத்தில் தேர்தல் களத்தில் திமுகவிற்கு கடும் போட்டியாக உருவெடுத்து வரும் கட்சி தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம். அந்த கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவிற்கு தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை விஜய் வழங்கினார். இதனையடுத்து கட்சியின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்து வரும் ஆதவ் அர்ஜூனாவை அவரது மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கியுள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

Continues below advertisement

தவெகவுடன் கூட்டணி அமையாததற்கு காரணம் யார்.?

அந்த கடிதத்தில்,ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது முதல், உங்கள் நலன் விரும்பியாக நான் ஒரு உண்மையை உரக்க சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.  தவெக-வுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க முடியாமல் முட்டுக்கட்டை போடுவது ஆதவ் அர்ஜூனாதான். இதற்கு பின்னால் அவருடைய சுயநலமும், அதிகார பசியும் மட்டுமே இருக்கிறது.திமுகவின் ஒரு முக்கிய புள்ளியால், உங்களையும் உங்கள் கட்சியையும் வேரோடு அழிப்பதற்காக அனுப்பப்பட்ட ‘Sleeper Cell’ தான் இந்த ஆதவ் அர்ஜூனா. தவெக-விற்கு கிடைக்க வேண்டிய மக்கள் ஆதரவைத் திசைமாற்றி, அதை எதிரணிக்குச் சாதகமாக்கும் சதிவேலைகளை அவர் மிகக் கச்சிதமாக செய்து வருகிறார்.

சகுனியாக ஆதவ் அர்ஜூனா

அதன் ஒரு பகுதிதான் கரூர் துயர சம்பவம். 41 அப்பாவி உயிர்கள் பறிபோன அந்த கோர சம்பவத்திற்கு பின்னணியில் ‘சகுனியாக’ இருந்து காய் நகர்த்தியவர் இவர் தான். சிபிஐ விசாரணையில் இவரது முகத்திரை கிழியும் என்பது உறுதி. அன்று செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்து சென்றதிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு என்பதை இந்த இடத்தில் பதிவிட விரும்புகிறேன்.

Continues below advertisement

செல்லும் இடமெல்லாம் தன்னைத் தானே தலைவனாக கட்டமைக்க முயல்வது இவரது வழக்கம். இதையுணர்ந்தே திருமாவளவன் அவர்கள் இவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அப்புறப்படுத்தினார். என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்—எங்கள் குடும்பத்தைப் பிரிக்க முயன்றது போல, உங்கள் குடும்பத்தையும் அரசியலையும் சிதைக்க அவர் தயங்கமாட்டார்.

கூடவே இருந்து குழிபறிக்கும் துரோக சக்தி

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என துடிக்கும் உங்கள் பயணத்திற்கு, நான் ஒரு நலம் விரும்பியாகச் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்... உங்கள் பாதை தெளிவாக இருக்கலாம்! ஆனால் பயணிக்க வேண்டிய தடம் வழுக்கலாக இருக்கிறது. கூடவே இருந்து குழிபறிக்கும் துரோக சக்திகளை அடையாளம் காண தவறினால், உங்கள் வெற்றி பாதியிலேயே முடங்கிப்போகும் அபாயம் உண்டு.  காலத்தே எடுக்கும் துணிச்சலான முடிவே கழகத்தின் எதிர்காலத்தை காக்கும். விழிப்புடன் இருங்கள், வெற்றிக்கான பாதையை சீர் செய்யுங்கள்! என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.