தமிழகத்தில் தொங்கு சட்டசபை
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அரசியல் களம் புதிய புதிய நிகழ்வுகளை சந்தித்துள்ளது. அந்த வகையில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், தவெக தலைவர் விஜய் தலைமையில ஒரு அணியும் தேர்தலை எதிர்கொண்டது. இதில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க 117 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காமல் உள்ளது. இதனையடுத்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைத்து ஆட்சி அமைக்க தவெக தரப்பு திட்டமிட்டுள்ளது.
தவெகவிற்கு அதிமுக ஆதரவு.?
அதே நேரம் தவெகவிற்கு ஆதரவளிக்க அதிமுகவும் முன்வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளால ஆட்சியில் இல்லாத அதிமுக, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் பெரிய அளவில் வெற்றி கிடைக்காத காரணத்தால் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் தான் சி.வி.சண்முகம் தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற ரகசிய ஆலோசனை கூட்டத்தில் தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவரும் ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. எனவே தவெக தரப்பில் தொடர்பு கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
ஆதரவை கேட்கும் தவெக
ஆனால் தவெக தரப்போ அதிமுகவை கண்டுகொள்ளாமல் உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை தங்களது அணியில் இணைய அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளது. எனவே தற்போது தவெகவிடம் 108 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்யும் பட்சத்தில் 107 எம்எல்ஏக்கள் தவெகவிடம் இருக்கும். எனவே மீதம் 10 முதல் 11 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் உள்ள 5 எம்எல்ஏக்கள் ஆதரவையும், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏக்கள் 6 பேரின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க தவெக காய் நகர்த்தி வருகிறது.
Wanted-ஆக செல்லும் அதிமுக
ஆனால் அதிமுகவோ Wanted-ஆக சென்று தவெகவிற்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளது. விஜய் தரப்போ அதிமுகவை தங்களது கூட்டணியில் இணைத்தால் மக்கள் இதுவும் திராவிட கட்சிகளை போல் தானோ என்ற எண்ணம் வந்து விடும் என்ற காரணத்தால் அதிமுகவை விஜய் கண்டு கொள்ளவில்லையென கூறப்படுகிறது. அதே நேரம் அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்ற ரீதியில் கடைசி நேரத்தில் எந்தவித மாற்றங்களும் அரங்கேறவாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
