DMK CONGRESS Alliance: உங்களுக்கு இவ்வளவு தான் ஒதுக்க முடியும்.! கெடுபிடி காட்டிய ஸ்டாலின்- ஷாக்கான காங்கிரஸ்
திமுக கூட்டணியில் கடந்த தேர்தலை விட கூடுதல் கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த 35 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பே இல்லையென திமுக தலைமை உறுதியாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீடு தீவிரம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் கூட்டணியை இறுதி செய்துள்ளது. அடுத்ததாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதிமுகவில் பாஜக, பாமக, அமமுக, தமாக,ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக,மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மநீம, மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளது.
காங்கிரஸ் - திமுக மோதல்
இந்த நிலையில் தான் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி என திமுகவிற்கு தொடர்ந்து இடையூறு கொடுக்க தொடங்கியது காங்கிரஸ். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையையும் நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள், ஆட்சியில் பங்கு என ஏகப்பட்ட ஆப்பர்களை அள்ளி கொடுத்தது. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவிற்கு எதிரான கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிய தொடங்கினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக நிர்வாகிகளும் கருத்துகளை கூறி வந்தனர்.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு செக் வைக்கும் வகையில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த தேமுதிகவை தங்கள் அணிக்கு இழுத்து காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்தது திமுக, இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க முடியாது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருமா.? அல்லது முறிவடையுமா.? என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நிர்வாகிகளை கண்டிக்கும் வகையில் கூட்டணி தொடர்பாக வெளியில் எந்தவித தகவலையும் தெரிவிக்க கூடாது என காங்கிரஸ் உத்தரவிட்டது.
கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்
இந்த நிலையில் தான் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை திமுக நேற்று தொடங்கியது. அதில் முதல் ஆளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது 5 தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என ஐயூஎம்எல் எதிர்பார்த்த நிலையில், 2 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என உறுதியாக தெரிவித்துள்ளது. மேலும் கூட்டணியில் புதிதாக கட்சிகள் இணைந்துள்ளதால் மற்ற கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீடு எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் திமுகவும் கடந்த முறை 173 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தற்போது 165 தொகுதிகளில் மட்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்
இதனையடுத்து நேற்று இரவு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபல் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு குறைந்தது 35 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் திமுக தரப்போ கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 25 இடங்கள் ஒதுக்கப்பட்டது.
தற்போது கூடுதலாக 2 இடங்களை சேர்த்து 27 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லையென கூறப்படுகிறது. எனவே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையின் போது தான் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக தெரியவரும்.























