கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான நூர் முகமது (68) வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Continues below advertisement

ஒவ்வொரு தேர்தலிலும் புதுமையான வடிவங்களில் வந்து கவனம் ஈர்த்து வரும் நூர் முகமது, இந்த முறை சுடுகாட்டில் இருந்து இறுதிச்சடங்கு பானையுடன் வந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். வாக்காளர்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பதை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

மீண்டும் வைரலான நூர் முகமது

Continues below advertisement

தொண்டாமுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, தேர்தல் விதிமுறைகளின்படி அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் பானையை உடைத்து வைத்து, பின்னர் அலுவலகத்திற்குள் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை தெற்கு கோட்டாட்சியருமான மாருதி பிரியாவிடம் அவர் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

நூர் முகமது இதற்கு முன்பும் பல்வேறு வேடங்களில் வேட்புமனு தாக்கல் செய்து கவனம் ஈர்த்துள்ளார். குதிரையில் ராஜா வேடத்தில், விவசாயியாக ஏர் கலப்பையுடன், சவப்பெட்டியுடன் என பல்வேறு முறைகளில் அவர் தோன்றியுள்ளார். இதுவரை ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் 48 முறை போட்டியிட்டுள்ள அவர், 1997ஆம் ஆண்டு கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், “ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறு” என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் தனது முயற்சியை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதற்காக இதுவரை சுமார் 8 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் கூறினார்.

“எல்லோருக்கும் இறுதிச்சடங்கு சுடுகாட்டில் தான் நடக்கும். ஆனால் ஓட்டுக்கு பணம் வாங்கினால், அது வீட்டிலேயே நடக்கும் என்பதைக் கூறுவதற்காகவே இந்த செயலை செய்தேன்” என்று நூர் முகமது தெரிவித்தார். மேலும், கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டால் இந்தியா வல்லரசாக மாறும் என்றும், அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களை மக்கள் ஏற்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். आगामी தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.