விஜய்யை MGR உடன் ஒப்பிட்ட ஜேசிடி பிரபாகரன்! 'கில்லி' வசனத்துடன் தொண்டர்களை உற்சாகப்படுத்திய பேச்சு!
JCP Prabhakaran: "எம்.ஜி.ஆரை பார்த்த அதே மகிழ்ச்சி.. விஜய்யிடம் காண்கிறேன்!", தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஜேசிடி பிரபாகரன் மகிழ்ச்சியாக பேசினார்"

"செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஜேசிடி பிரபாகரன் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்."
தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜேசிடி பிரபாகரன், நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தையும் அரசியலையும் ஒப்பிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
சினிமா பாணியில் அரசியல் பஞ்ச்
"தலைவர் எப்போது பேசுவார் என ஒட்டுமொத்த அரங்கமே காத்திருக்கிறது. நான் அவருடைய படங்களை அதிகம் பார்த்ததில்லை என்றாலும், சில பஞ்ச் வசனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்," எனக் குறிப்பிட்ட அவர், விஜய்யின் திரை வசனங்களை மேற்கோள் காட்டி பேசினார்: "எதிர்ப்பு எங்கே இருக்கிறதோ, அங்கே சிக்சர் அடித்துவிட்டு சென்டர்ல சேர் போட்டு அமர்வதுதான் நம் ஸ்டைல். நமது பேச்சு சைலன்ட்டாக இருக்கலாம், ஆனால் அடி சரவெடியாக இருக்கும்."
"எந்த ஏரியா என்ற பயம் கிடையாது, 'ஆல் ஏரியாவுலயும் நான் தான் கில்லி' என்பது போல, இன்று தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் தவெக-வின் விசில் சத்தம் கேட்கிறது," என அவர் முழங்கினார்.
எம்.ஜி.ஆருடன் ஒப்பீடு
1972-ல் எம்.ஜி.ஆரை முதன்முதலில் சந்தித்தபோது தனக்கு ஏற்பட்ட அதே மகிழ்ச்சியும் எழுச்சியும், விஜய்யை முதன்முதலாகப் பார்த்தபோதும் ஏற்பட்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "நாடு ஒரு நல்லவரைத் தேடிக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர் கிடைத்தார்; இப்போது இன்னொரு நல்லவராக விஜய் கிடைத்திருக்கிறார்," என்றார்.
கோட்டைக்கு அனுப்ப மக்கள் தயார்
தமிழக அரசியலில் ஆர்ப்பாட்டம் செய்து பதவிக்கு வந்தவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எந்தவித பகட்டும் இன்றி 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' என அமைதியாக வந்து மக்களின் உள்ளங்களை விஜய் வென்றுள்ளார் எனப் பாராட்டிய அவர், "யாரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், யாரைக் கோட்டைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்," எனச் தெரிவித்தார்.
ஒற்றுமையே பலம்
தவெக-விற்கு கட்டமைப்பு இல்லை என விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், கட்சியின் அடிப்படை பலமே ஒற்றுமைதான் என்றார். "ஒரு தாய் மக்கள் நாம் என்போம், தலைவன் ஒருவன் தான் என்போம்..." என்ற பாடலைப் பாடி, தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தலைவரின் கண்ணசைவிற்கு ஏற்பச் செயல்பட வேண்டும் எனவும், அந்த ஒற்றுமை இருந்தால் தமிழகத்தில் தவெக-வை வீழ்த்தும் சக்தி எதுவுமில்லை என்றும் தனது உரையை நிறைவு செய்தார்.





















