Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji ED Governor: செந்தில் பாலாஜி மீதான முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Senthil Balaji ED Governor: அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர அனுமதி கோரி, ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது.
திமுக ஷாக்.. அனுமதி கொடுத்த ஆளுநர்?
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி,பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருந்த பிறகு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் அவரிடம் விசாரணை நடத்த, முன்னாள் அமைச்சர் என்பதால் தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரி அமலாக்கத்துறை அண்மையில் கடிதம் அனுப்பியது. அந்த கடிதம் தொடர்பான கோரிக்கை ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் அமலாக்கத்துறை விரைவில் சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் தான் திமுக முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜி மீதான வழக்கும் சூடுபிடித்து இருப்பது திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆளுநர் அனுமதி ஏன் அவசியம்?
வேலை வாங்கி தருவதாக லஞ்சம் வாங்கியதாக செந்தில் பாலாஜி மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. எம்.எல்.ஏ., மற்றும் எம்.பிக்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இருப்பினும் அவர் முன்னாள் அமைச்சர் என்பதால், விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி அவசியமாகிறது. அதன்படி, கடந்த ஆண்டு திமுக ஆட்சியின் போது, ஆளுநரின் ஒப்புதல் கோரி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. ஆனால், மாநில அரசு மூலமாகவே ஆளுநருக்கு மனு அனுப்ப வேண்டும் என கடிதம் திருப்பி அனுப்பப்பட்டது.
முதலமைச்சர் ஒப்புதலுடன் கடிதம்?
இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து செந்தில் பாலாஜி மீது மேல் நடவடிக்கை மற்றும் விசாரணைக்கு அனுமதி கோரி தலைமைச் செயலருக்கு அமலாக்கத் துறை கடந்த மாதம் 15ம் தேதி கடிதம் எழுதியது. அதன்படி, செந்தில் பாலாஜி மீதான புகாரில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்ய ஆளுநரின் அனுமதி கோரி தவெக அரசு கோரியுள்ளது. முதலமைச்சர் விஜய் ஒப்புதலுடன் ஆளுநர் மாளிகைக்கு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. அதற்கு ஆளுநரும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த என்ன?
ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக வெளியாகியுள்ள தகவல் உண்மையாகும் பட்சத்தில், விரைவில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்படும். விசாரணையை தொடர்ந்து கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம். பல முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள், ஆட்சி அதிகாரத்தால் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சியில் இல்லாததால், அந்த கட்சிகளை சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளை விரைவுபடுத்த அமலாக்கத்துறை வேகம் காட்டி வருகிறதாம்.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்























