அதிமுகவில் உட்கட்சி மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் தேர்தலில் 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதால் உட்கட்சி மோதல் காரணமாக பல பிரிவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி- சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் என பிரிந்துள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில்,
மற்றோரு ஷாக் தகவலாக எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முக்கிய நிர்வாகியாகவும், சபாநாயகராகவும் இருந்த தனபால் அதிமுகவில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார். இன்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதிமுகவில் இருந்து விலகிவிட்டேன்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனபால் செய்தியாளர்களிடம் கூறும்போது, தாம் அதிமுகவில் இருந்து விலகி விட்டதாகவும், உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். எனது மகன் புதிய அரசின் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார் . இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக வந்தேன். நான் பல பதவிகளை வகித்துள்ளேன். தற்போது எனது மகன் அந்த இடத்திற்கு சென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
அதிமுகவில் பல வகையில் என்னை புறக்கணித்தார்கள். எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் விலகி விட்டேன். எனது மகன் கோபித்து கொண்டு தவெகவில் இணைந்துவிட்டார். அதிமுக தலைவர்கள் தவறு செய்தார்கள் தற்போது அனுபவிக்கிறார்கள். எல்லோரையும் புறக்கணித்தார்கள் இன்று மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளார்கள்.
அதிமுக பிளவு - மனம் நொந்துள்ளது
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சைக்கிளில் சென்று பிரச்சாரம் செய்தேன். ஆனால் எனக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால் மனம் நொந்து அதிமுகவில் இருந்து விலகி வந்துள்ளேன். நான் வளர்த்த அதிமுக இப்போது நிலையை பார்த்து வருத்தமாக உள்ளது என தெரிவித்தார்.
