அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நடத்திய விருந்து நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய செங்கோட்டையன், ”எடப்பாடியாரை வணங்கி உரையை ஆரம்பிக்கிறேன்” என்று கூறியிருப்பதன் பின்னணி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

சில மாதங்களாக தொடர்ந்த இபிஎஸ்-செங்கோட்டையன் சண்டை

கடந்த சில மாதங்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனிடையே, டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசியது, நிர்மலா சீதாராமனை சந்தித்தது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுகவினர் எல்லோரும் வெளி நடப்பு செய்தபோது செங்கோட்டையன் மட்டும் உள்ளே அமர்ந்திருந்தது என இவரது செயல்பாடுகளால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். “அண்ணன் மூத்த நிர்வாகி, எடப்பாடியர் பொதுச்செயலாளர் ஆவதற்கு இவர் தானே முக்கிய பங்காற்றினார், இப்போது ஏன் இப்படி செய்து கொண்டிருக்கிறார்” என்று அவர்கள் புலம்பியுள்ளனர்.

இபிஎஸ் அளித்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்

இந்த சூழலில் தான், நேற்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரவு விருந்து வழங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில், செங்கோட்டையன் மட்டும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். அண்மையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதிசெய்யப்பட்டபோதே, அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய அமித்ஷா, “எல்லோரும் ஒன்றாக இருந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும், அதிமுகவினர் பல பிரிவுகளாக பிரிந்து இருந்தால், அது நமது கூட்டணிக்குத்தான் ஆபத்து, எனவே எல்லோரும் ஒன்றாக இருங்கள், அப்படி இருந்தால் தான் திமுவை வீழ்த்த முடியும்” என்று அட்வைஸ் கொடுத்ததாக தகவல் வெளியானது.

இரவில் முடிந்த டீல்.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்

இந்த நிலையில் தான், நேற்று இபிஎஸ் நடத்திய விருந்து நிகழ்வில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது அதிமுக மற்றும் பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பாஜக நிர்வாகிகள் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு, “அமித்ஷா ஏற்கனவே எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார், தேர்தல் நெருங்கும் சூழலில் நீங்கல் இப்படி நடந்து கொண்டால் மக்களுக்கு எப்படி நம் கூட்டணி மீது நம்பிக்கை வரும், உங்கள் மனதில் இபிஎஸ் மீது எந்த விமர்சனங்கள் இருந்தாலும், அதை கொஞ்ச நாட்களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, இபிஎஸ்-உடன் இணைந்து செயல்படுங்கள்’ என்று கூறியதாக தகவல் வெளியானது.

அதேபோல், இபிஎஸ் தரப்பும் செங்கோட்டையனை சமாதானப்படுத்தி, ஏதோ டீல் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் தான் இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், “எடப்பாடியாரை வணங்கி” என்று தனது பேச்சை செங்கோட்டையன் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம், இனி தனக்கு எதிராய் யாரும் இருக்கக் கூடாது, அதிமுக என்றால் இபிஎஸ்.. இபிஎஸ் என்றால் அதிமுக என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதிசெய்திருக்கிறார் என்று சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.