தமிழகம் முழுவதும் வரும் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழகம் முழுவதும் காவல்துறையினருடன் இணைந்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் 24 மணிநேரமும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தலைநகர் சென்னையில் இன்று அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்தி, வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட்டனர்.




அப்போது, அந்த வாகனத்தில் ரூ.1 கோடியே 30 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கிக்காக கொண்டுசெல்லப்பட்ட பணம் என்று வாகனத்தில் வந்தவர்கள் பதிலளித்தாலும், அதற்கு உரிய ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, அந்த பணத்தை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.