திமுக அரசின் கைது என்ற பூச்சாண்டிக்களுக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் பயப்படாது என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரக்கோணம் MRF நிறுவனத்தில் அடிப்படை உரிமைகளை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற எம்.எல்.ஏ ரவியை காவல்துறை தடுத்து கைது செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, எத்தனை அடக்குமுறைகளை ஸ்டாலினின் அரசு ஏவி விட்டாலும் அவைகளை எதிர்கொள்ளக் கூடிய வல்லமை எங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார். 

எதற்காக ரவி கைது ?

அரக்கோணம் MRF அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை விளக்கவும், மே தின தொழிலாளர்கள் நல்வாழ்த்துகளைக் கூறும் வகையில் வாயிற் கூட்டம் நடத்தி, சங்கக் கொடி ஏற்றி இனிப்பு வழங்க வருகை தந்த இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சு. இரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு. ஆர். கமலக்கண்ணன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கோ. அரி உள்ளிட்ட கழக நிர்வாகிகளை விடியா திமுக  மாடல் அரசு இன்று காலை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.